மரங்களின் வரங்கள்!: மூலிகை மரம் காஞ்சி மரம்

நான் தான் காஞ்சி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் டிரீவியா நியூடிபுளோரா என்பதாகும். நான் பூபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: மூலிகை மரம் காஞ்சி மரம்
Updated on
2 min read

குழந்தைகளே நலமா?

நான் தான் காஞ்சி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் டிரீவியா நியூடிபுளோரா என்பதாகும். நான் பூபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் இந்தியா. எனக்கு செம்மருது, ஆற்று பூவரசு, ஆற்றரசு, சன்னத்துவரை, நாய்க்குமிள் என 14 வகையான பெயர்கள் உள்ளதாக சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. நான் நம் நாட்டில் பல மாநிலங்களில் காணப்படுவேன். எங்கிட்டேயும் பல மருத்துவ குணங்கள் இருக்கு.

எனக்கும் அண்ணன் தேக்கு மரத்துக்குள்ள சக்தி இருக்கு. அதனால் தான் என்னை ஆங்கிலத்தில் ஃபால்ஸ் டீக் வுட்ன்னு சொல்றாங்க. அகநானூற்று பாடல் ஒன்று, "குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் பொன் நகை நுண்தாது உறைப்ப' என்று சொல்கிறது. அதாவது, காஞ்சி மலரின் மகரந்தம் பொன் நகைபோல மின்னும் என்கிறது. நான் குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடுவேன். நான் பெரும்பாலும் ஆற்றோரங்களில் தான் வளருவேன். ஒரு காலத்தில் நான் காஞ்சிபுரத்தில் மிகுதியாகக் காணப்பட்டேன். சேரநாட்டில் ஓர் ஆற்றுக்குப் பெயர் காஞ்சி.

என் பூக்கள் கொத்து கொத்தாக சாரமாகத் தொங்கும். முற்காலத்தில் போரிடும் மன்னர்கள் என் பூவை சூடிக் கொண்டு போய் போரிட்டால் வெற்றி நிச்சயம் என்று திண்ணமாக நம்பினர். காஞ்சிப் பூவைச் சூடிக் கொண்டு போரிடுவது காஞ்சித் திணை. என் பூக்கள் மலரும் போது மீன் போல தோற்றமளிக்கும். என் பூக்கள் மரத்திலிருக்கும் போதே மகரந்தம் கொட்டும். மேகலை, காஞ்சி, வாகுவளையம் ஆகியவை மகளிர் இடையில் அணியும் அணிகலன்கள்.

குழந்தைகளே, அந்தக் காலத்தில் ஏன் என்னை ஆற்றோரங்களில் வளர்த்துக் காத்தார்கள் தெரியுமா, மண்ணை இறுக்கி ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து நான் அவர்களைக் காப்பாற்றுவேன் என்பதால் தான். கரை புரண்டு ஓடி வரும் வெள்ளத்தையும், மண்ணை இறுக்கி, வெள்ளம் ஊருக்குள் வராதவாறு தடுத்து நிறுத்தும் சக்தி எனக்கிருக்கு. சிறு பறவைகள் என் மரத்தில் கூடு கட்டி வாழும். என் இலைகள் ஆடு, மாடுகளுக்கு நல்ல உணவு. என் பழங்களை மான்களும், காட்டு விலங்குகளும் ருசித்து உண்ணும். அக்கால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் என் பூவும் ஒன்று என்று கபிலரின் குறிஞ்சிப் பாட்டு தெரிவிக்கிறது. என் தளிர்களை ஆரமாகக் கட்டி அணிந்து கொள்வர்.

அமரும் இருக்கைகளை என் மரத்தழையில் செய்தால் மெத்மெத்தென்று இருக்கும். என் பட்டையை நீரிலிட்டு காய்ச்சிக் குடித்தால் பித்தம், வயிற்று உப்புசம், உடல் வீக்கம், இரைப்பை மற்றும் குடல் வலி நீங்கும். என் கட்டைகள் மிகவும் மிருதுவானவை என்பதால், நான் தீக்குச்சிகள், தேயிலைப் பொருட்களைத் தாங்கும் பெட்டிகள், வேளாண்மைக் கருவிகள், நுகத்தடிகள், சிலேட்டுகள், படங்களுக்குப் பிரேம் போடும் சட்டங்கள், குழந்தைகள் விளையாட்டுச் சாமான்கள் தயாரிக்க பெரிதும் உதவுகிறேன்.

குழந்தைகளே, உங்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் உங்களுக்கு நிழலை மட்டும் தரவில்லை. நீங்கள் உண்டு மகிழ, காய், கனிகளைத் தருகிறோம். மழைக்கு ஆதாரமாக இருப்பது எது என்று உங்களைக் கேட்டால், நீங்கள் மரம் என்று டக்னு சொல்கிறீர்களாமே, ரொம்ப சந்தோஷம். சுற்றுச்சூழலையும் தூய்மைப்படுத்தி, தூசி, புகை போன்ற நச்சுப் பொருள்களால் காற்றில் ஏற்படும் மாசுகளையும் நாங்கள் தடுக்கிறோம். நாம் வாழும் இந்த உலகை அதன் சமநிலை மாறாமல் காப்பது உங்களது கடமையல்லவா? நன்றி குழந்தைகளே, மீண்டும்சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com