

வா வா தம்பி கடலருகே
வரவேற்கிறது அலைக்கரங்கள்!
பூவாய்ச் சிதறும நுரையழகு
பொலியும் நுரையால் கரையழகு!
கடலும் வானும் நெருங்கியதால்
உடலில் நீலம் பூசியதோ?
சுடரும் நிலவும் சூரியனும்
கடலில் எழுதல் போல் தெரியும்!
முத்தை எடுக்க வருகவென
முரசம் முழக்கி அழைக்கிறதோ?
நித்தம் மீன்கள் பிடிப்பதற்கு
கத்தும் குரலால் அழைக்கிறதோ?
மழலைச் சிறுவர் வீடுகட்ட
மணலும் பரந்தே கிடக்குது பார்!
அழகாய் அலையின் ஊஞ்சலிலே
ஆடும் ஓடம் ஓடுது பார்!
உண்ணும் உணவில் சுவையளிக்கும்
உப்பை எடுப்பார் பாத்தி கட்டி!
இன்னும் இன்னும் கடல் வளத்தை
ஏட்டுப் படிப்பில் தெரிந்திடுக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.