கண்ணைக் கவரும் சிவப்பு வண்ணம்
காலைச் சூரியன் வரைகிறான்!
விண்ணை ஆளும் இறைவன் பகலில்
நீல வானில் விரிகிறான்!
பச்சை வண்ணம் பார்க்க அழகு
பசுமை வயலில் தருகிறான்!
இச்சை கொண்டு இரவின் வானில்
மஞ்சள் நிலவாய் வருகின்றான்!
சிந்தும் மழைத்துளி மேகம் தன்னில்
சீரிய வானவில் காட்டுகின்றான்!
அந்திக்கு மேலே சந்திக்கும் இரவில்
அற்புத வண்ணங்கள் கூட்டுகின்றான்!
வைரக் கற்கள் போல் விண்மீன்கள்
இரவில் வானில் ஜொலிக்கிறதே!
உருக்கிய வெள்ளிக்கம்பிபோல் மின்னல்
ஊன்றித் தரையைத் தொடுகிறதே!
இறைவன் வரையும் ஓவியம் வானில்
பார்க்கப் பார்க்கப் பரவசம்!
மறைவாய் இருந்தே மாயம் செய்யும்
ஆண்டவன் தூரிகை அற்புதம்!