பாடம் மட்டும் கல்வி யல்ல
படிக்க வேண்டும் எல்லாம்!
நாடும் உலகும் அறிந்து கொள்ள
நாளும் செய்தி வாசி!
நாட்டுக்காகத் தியாகம் செய்த
நல்லோர் கதைகள் அறிக.
வீட்டுக்காகப் பாடு படும்
பெற்றோர் சொல்வதைக் கேளு!
தீயும், காற்றும், நீர், விண், மண்ணும்
காக்கும் பூதங்களாகும்!
போற்ற வேண்டும் இயற்கையை நாமும்
என்பதை அறிந்து கொள்வாய்!
கற்பனையோடு பாட்டி சொல்வாள்
பற்பல கதைகள் நமக்கு! - அதில்
அற்புதமாக நீதி இருக்கும்
ஆர்வத்துடனே கேளு!
புத்தம் புதிய சொலவடைகள்
விடுகதைகள் சொல்வாள்!
மெத்தம் படித்த மேதைகளும்
விடைக்குத் திணறுவார்கள்!
கண்டன யாவும் கற்றுக்கொள் நீ
பண்டிதனாக ஆவாய்!
பண்டைய நூல், புது விஞ்ஞானம்
படிக்க வேண்டும் தம்பி!
அனுபவங்கள் அத்தனையும்
அரிய கல்வி தம்பி!
ஆற்றல் உனக்குள் ஏராளம் - அதனை
அறிய வைக்கும் கல்வி!