அன்புச் சொற்கள் சிறியவை
அளிக்கும் நன்மை பெரியவை!
பண்புச் சொற்கள் எளியவை
பளிங்கு போல ஒளிர்பவை!
கனிவு மிக்க சொற்களில்
கருணை உள்ளம் வெளிப்படும்!
கனிகள் போல நலந்தரும்!
கண்ணீரையும் துடைத்திடும்!
சொல்லி விட்ட சொல் ஒன்று
எய்த அம்பு போன்றது!
சொல்லைச் சொல்லும் முன்னரே
எண்ணிப் பார்த்தல் நல்லது!
எதனைக் காக்கத் தவறினும்
நாவைக் காத்தல் உயர்ந்தது!
நாவைக் காக்கத் தவறினால்
நாளும் தொல்லை வந்திடும்!
பணிவும்,.... பேச்சும் இன்சொல்லும்
அணிகள் அன்றோ வாழ்விலே! - இம்
மணிகள் குறளில் உள்ளவை - நம்
மாண்பைக் காக்கும் பொற்குவை!