சிறிய விதைக்குள் ஆலமரம்
சிசுவாய் உள்ளே இருக்கிறது!
அறிஞன் ஆகும் தகுதியெல்லாம் - இந்த
அரும்பின் உள்ளே இருக்கிறது!
மண்ணில் விழுந்த விதையெல்லாம்
தண்ணீர் கிடைத்தால் கிளர்ந்தெழுமே!
அன்புத் தண்ணீர் ஊற்றுங்கள்! - நான்
ஆற்றல் பெற்று மலர்ந்திடுவேன்!
"எதுவும் முடியும் உன்னாலே'
என்று சொல்லி வளருங்கள்!
உதவும் கரங்கள் உன் கரங்கள் - எனும்
உன்னத எண்ணம் பதியுங்கள்!
கதையில் கூட முன்னேற்றம்
காணும் கதையைக் கூறுங்கள்!
விதியைக் கூட வெல்கின்ற - நல்
வித்தை தன்னைச் சொல்லுங்கள்!
துன்பம் எல்லாம் தூளாக
துணிவைத் தந்து வளருங்கள்!
இன்பம் பெறலாம் உழைப்பாலே
என்பதை மனத்தில் விதையுங்கள்!