மலையைத் தாண்டித் துள்ளிக் குதித்து
மண்ணை விரும்புது அருவி!
மருந்து, மூலிகை பூக்கள் மணத்தை
மாந்தர்க்கு வழங்குது அருவி!
குளிர்ந்த நீரில் குளிக்கும்போது
களிக்கும் உள்ளம் ஆனந்தம்!
குழந்தை பெரியோர் கவலை மறந்து
குதித்தல் அங்கே பேரின்பம்!
மரம், செடி, கொடிகள் மழையின் தூறல்
மந்திகள் ஆட்டம் ஆனந்தம்!
மலையின் மீது தோன்றும் மயில்கள்
தோகை விரித்தல் பேரின்பம்!
பறவைகள் எல்லாம் கூட்டை நோக்கிப்
பறக்கும் காட்சி ஆனந்தம்!
சிறகுகள் இருந்தால் நாமும் பறப்போம்
என்றே எண்ணுதல் பேரின்பம்!