காரைக்குடியில் உள்ள நெசவாளர் காலனியில் கனரா வங்கியின் நூற்றாண்டு (கிராமியப் பயிற்சி) அறக்கட்டளை மூலம் இயங்கி வருகிறது கனரா வங்கியின் சிற்பக்கலைப் பயிற்சி நிறுவனம்.
சிற்பக்கலைக்கு புத்துணர்ச்சியூட்டவும், ஆர்வமுள்ள ஏழை, எளிய இளங்கலைஞர்களுக்கு சிற்பக்கலையைக் கற்றுத்தந்து அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் கனரா வங்கி மூலம் நிறுவப்பட்டுள்ளது சிற்பக்கலை பயிற்சி நிறுவனம்.
இங்கு தனித்தனி வகுப்பறைகள், பயிற்சிக் கூடங்கள், கலைசார்ந்த நூலகம், அருங்காட்சியகம் ஆகியவை இயங்கி வருகிறது. இங்கு கல், மரம், உலோகச் சிற்பங்கள் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்குள்ள அருங்காட்சியகத்தில் பயிற்சிக்கூட மாணவர்களால் படைக்கப்பட்ட விநாயகர், கிருஷ்ணர், சிவன், லட்சுமி, முருகன், தேவமாதா எனப் பல்வேறு வகையான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தனி விடுதி வசதியுடன். தினமும் காலையில் தியானப் பயிற்சியும், மாலையில் விளையாட்டு என குருகுல முறையில் கலைப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.
இம்மையத்தில் பயின்ற மாணவர்கள் பலர் சுயதொழில் கூடங்கள் தொடங்கியும், திரைப்படத் துறையில் அனிமேஷன், கட்டடத் துறையில் உள்அலங்காரம், கலைநயமிக்க கதவுகள், நிலைகள், பீரோக்கள் செய்தல், ஆன்மிகத் துறையில் புதிய கோவில் நிர்மாணித்தல், பழைய கோவிலைப் புதுப்பித்தல் போன்ற வேலைவாய்ப்பு பெற்று நல்ல நிலையில் உள்ளனர்.
இங்கு பயிற்சி முடிந்த பிறகு 2 ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடனும் கிடைக்க வழிசெய்யப்படுகிறது. இந்த இலவச பயிற்சி பெற குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பயிற்சிக் காலம் 18 மாதங்கள்.