ஏழைகளுக்கு உதவும் மருத்துவ சேவை!
உடம்புக்கு ஏதாவது நோய் வந்துவிட்டால் ஏழைகளின் பாடு திண்டாட்டம்தான்.


உடம்புக்கு ஏதாவது நோய் வந்துவிட்டால் ஏழைகளின் பாடு திண்டாட்டம்தான். மருத்துச் செலவு கன்னாபின்னாவென்று அதிகரித்துவிட்ட இக்காலத்தில், கையில் பணமில்லாத ஏழைகள் என்ன செய்வது? அதிக விலை கொடுத்து மருந்துகளை எப்படி வாங்குவது? எப்படிச் சிகிச்சை பெறுவது? என்று கலங்கிக் கொண்டிருப்பார்கள்.
""அப்படியெல்லாம் கலங்கத் தேவையில்லை. எங்களுக்குப் போன் செய்தால் (94459 22333) உடனே எங்களாலான உதவிகளைச் செய்கிறோம்'' என்கிறார் நந்தினீ ஸ்ரீ. சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து செயல்படும் ஏகம் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் அவரிடம் பேசினோம்.
"" நான் படித்தது எம்.எஸ்ஸி விலங்கியல். என்றாலும் எனக்குச் சமூக சேவையில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. அதுவும் குழந்தைகளின் நலனில் அக்கறை இருந்தது. அதனால் யாருக்காவது உதவி செய்யலாம் என்று நினைத்து சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வருவேன்.
இங்கு வருகிற நோயாளிகள் வரிசையாக நிற்காமல் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு நிற்பார்கள். டாக்டர்கள் நடந்து செல்வதே சிரமமாக இருந்தது. நான் அவர்களை வரிசையில் நிற்க வைத்தேன். ஒவ்வொரு நோயாளியாக டாக்டர் கவனிக்கும் விதமாக ஒழுங்குபடுத்தினேன். இதனால் அங்குள்ள டாக்டர்களிடம் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
2011 இல் ஏகம் பவுண்டேஷனில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தேன்.
ஏகம் பவுண்டேஷனைப் பொறுத்தவரை குழந்தைகளின் உயிர்களைக் காப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
ஓர் ஏழை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்குத் தேவையான சிகிச்சை செய்வதில் தடை ஏதும் ஏற்பட்டால் ஏகம் பவுண்டேஷன் உடனே உதவுகிறது. மருத்துவமனையைத் தூய்மையாக வைத்துக் கொள்ள தன்னார்வப் பணியாளர்கள் மூலமாக உதவுகிறோம். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எங்களுக்குத் தொலை பேசி மூலம் தெரிவித்தால் போதும், அவருக்கு என்ன நோய் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கிடைக்குமோ அந்த மருத்துவமனையில் அவர்களைச் சேர்க்கிறோம். அவருடைய சிகிச்சைக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறோம்.
இவை தவிர, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறோம்.
ஆபத்துக் காலங்களில், அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ûஸ அனைவரும் அழைப்பார்கள். ஆனால் அப்படி அழைக்கும்போது என்ன விவரங்களை அவர்களிடம் கூற வேண்டும் என்று நிறையப் பேருக்குத் தெரியாது. ஹார்ட் அட்டாக் வந்த நோயாளி எனத் தெரிவித்தால், அவர்களுக்குத் தேவையான முதல் உதவிக் கருவிகளுடன் 108 ஆம்புலன்ஸ் வரும். விபத்தில் அடிபட்டு அதிக ரத்தம் வெளியேறியதாகச் சொன்னால் அதற்குத் தேவையான கருவிகளுடன் ஆம்புலன்ஸ் வரும். எனவே 108 ஆம்புலன்ûஸ அழைக்கும்போது என்னென்ன விவரங்களைச் சொல்ல வேண்டும் என்று சொல்லித் தருவதற்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறோம்.
ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள ஒரு குடும்பத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்குகிறார்கள். சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ரூ.1,50,000 வரை வழங்குகிறார்கள். இவற்றைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. எனவே நாங்கள் ஏழை மக்கள் உள்ள பகுதிகளுக்குச் சென்று இந்தத் திட்டத்தால் யாருக்கெல்லாம் பயன் உண்டு? எத்தனை விதமான நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும்? மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒருவரைப் புதியதாகச் சேர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பனவற்றைப் பற்றி விளக்கிச் சொல்கிறோம்.
கருவுற்ற பெண்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க என்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? குழந்தை பிறந்த பிறகு என்ன உணவுகளைக் கொடுக்க வேண்டும்? 18 வயது வரை பெண் குழந்தைகளுக்குத் தர வேண்டிய உணவுகள் எவை? என்பனவற்றைப் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
கருவுற்ற பெண்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள் போன்றவற்றைப் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறோம்.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் மூலிகைச் செடிகளை வளர்ப்பது, மூலிகைகளின் மருத்துவகுணங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வது போன்ற எதிர்காலத் திட்டங்களும் உள்ளன. சில மருத்துவமனைகளில் மூலிகைச் செடிகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறோம். இவையெல்லாவற்றையும் நாங்கள் நல்ல உள்ள கொண்ட பொதுமக்கள் தரும் நிதி உதவிகளால்தான் செய்ய முடிகிறது.
ஒரு குழந்தை பணம் இல்லாத காரணத்தால் சரியான சிகிச்சை கிடைக்காமல் இறந்து போய்விடக் கூடாது என்பதில் ஏகம் பவுண்டேஷனின் நிறுவனர் டாக்டர் சாய்லக்ஷ்மி உறுதியாக இருக்கிறார்கள். அவருடைய வழிகாட்டுதல், முன்முயற்சி ஆகியவற்றால் எங்கள் சேவைகளைத் தொடர முடிகிறது'' என்றார் நந்தினீ ஸ்ரீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...