மாட்டுக் கொம்பில் கலைப் பொருள்கள்
தமிழக கைவினை கலைஞர்களால் தயார் செய்யப்படும் கலைப் பொருள்களுக்கு அண்மைக் காலமாக உலகச் சந்தையில் தனிமவுசு ஏற்பட்டு வருகிறது.


தமிழக கைவினை கலைஞர்களால் தயார் செய்யப்படும் கலைப் பொருள்களுக்கு அண்மைக் காலமாக உலகச் சந்தையில் தனிமவுசு ஏற்பட்டு வருகிறது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற வகையில் நமது கலைஞர்கள் மீன் செதில்கள், தேங்காய் சிரட்டை, வாழைநார், தெர்மாக்கோல், அரச இலை என புதுப்புது மாடல்களில் கலைப் பொருள்களைத் தயார் செய்து அசத்தி வருகின்றனர்.
இறைச்சிக் கடைகளில் தூக்கி எறியும் மாட்டுக் கொம்புகளை வாங்கி கலைப் பொருள்கள் தயாரித்து வருவாய் ஈட்டுகின்றனர் தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடோடி மக்கள். பாரம்பரியமாக இதில் ஈடுபட்டு வரும் இவர்கள், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய சுற்றுலாத்தலங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட இடங்களைத் தேர்வு செய்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள வீடுகளை அலங்கரித்து வரு
கின்றன இந்த கலைப் பொருள்கள்.
இவர்களின் கைவண்ணத்தில் மயில், கொக்கு, புறா, தாய்க் கொக்கு தன் குஞ்சுக்கு உணவு ஊட்டுவது, ஒற்றைக்கால் கொக்கு, மீன்கள், சிகை அலங்கார பொருள்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள் கலைநயத்துடன் உருவாக்கப்படுகின்றன.
கடந்த 45 ஆண்டுகளாக இதில் ஈடுபட்டு வரும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கீழசிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் கூறியதாவது:
""மாட்டுக் கொம்பு மூலம் கலைப் பொருள்கள் தயாரிக்கும் என்னைப் போன்ற கலைஞர்கள் தென் மாவட்டங்களில் ஏராளமாக உள்ளனர். கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடோடி மக்களாகிய நாங்கள் பாரம்பரியமாக இதனைச்
செய்து வருகிறோம். இறைச்சிக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும் மாட்டுக் கொம்புகளை கிலோ ரூ. 50-க்கு விலைக்கு வாங்கி வந்து இதனைத் தயார் செய்கிறோம்.
கலைப் பொருள்களைத் தயாரிக்க மாட்டுக் கொம்புகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். எவ்வித கலப்படமும் இல்லாமல் இயற்கையாகவே தயாரிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பார்க்க கண்ணாடிபோன்று பளபளப்பாக இவை உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் பொருள்களின் தரத்தைப் பார்த்து எவ்வித பேரமும் பேசாமல் வாங்கிச் செல்கின்றனர். ஒரு பொருளை தயாரிக்க முற்பட்டால் அதனை முடித்து விட்டுதான் மறுவேலை பார்ப்போம்.
தயாரிக்கப்படும் பொருள்களுக்கு ஏற்றவாறு ரூ. 250 முதல் ரூ. 500 வரை விலை நிர்ணயம் வைத்துள்ளோம். போதிய வருவாய் கிடைத்து வருவதால் யார் உதவியும் இன்றி சொந்தக்காலில் பிழைப்பை நடத்தி வருகிறோம்'' என்றார் அவர். கையில் கலை இருந்தால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த மக்கள் ஓர் உதாரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...