மாணவனுக்கு தங்கப்பதக்கம்!

நேபாள நாட்டில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மு.கார்க்கி.
மாணவனுக்கு தங்கப்பதக்கம்!
Updated on
1 min read

நேபாள நாட்டில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மு.கார்க்கி.

""யோகா என்பது உடல் நலத்தை மேம்படுத்துகிறது. அதன் மூலம் மனிதர்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது. மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறனையும் மேம்படுத்துகிறது. சுயக்கட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நமது உடல் நலம் குறித்த பொறுப்பை நாமே ஏற்றுக் கொள்ள உதவுகிறது. உணவுப் பழக்க வழக்கங்கள் நமது உடலில் இருந்து கழிவுகள் எளிதாக வெளியேறுவது ஆகியவற்றை மேம்படுத்துவதும் யோகாவின் முக்கியமான அம்சமாகும். இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட யோகா மூலம் என்னுடைய சாதனை சாத்தியமானது. 

எனது அப்பா முருகேசன் அரசு ஊழியர். அம்மா மகேஸ்வரி ஊரட்சியில் நூறு நாள் வேலை பார்க்கிறார்.  கஷ்டப்படும் குடும்பம் தான். ஆனால் சிறுவயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் இருந்தது. அ.புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரையிலும். மைக்கேல் பாளையத்தில் 11-ஆம் வகுப்பும். அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பும் படித்தேன். 

தற்போது ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலை வேதியியல் இரண்டமாண்டு படித்து வருகிறேன்.அண்மையில் தான் நேரடி வகுப்புகள் தொடங்கின. இதுவரை இணைய தள வகுப்புகள் மூலமாக கல்வியைக் கற்றுக் கொண்டே இருந்தேன். அதுவும் ஊரடங்கு காலத்தில் மைதானத்திற்கு செல்லாமல் என்னுடைய முழு பயிற்சியை வீட்டில் இருந்தபடியே செய்தேன்.

அனைத்துக்கும் உறுதுணையாக இருந்தது எனது பயிற்சியாளர்  தீபிகா என்பவர் தான். தேசிய அளவில் சிலம்பம், யோகா போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளுக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 6, 7, 8 ஆகிய மூன்று நாள்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் "யூத் ஏசியன் கேம்ஸ் பெடரேஷன்'( இந்தியா) அமைப்பு நடத்தியது. அதில் 19வயதுக்குட்பட்டோருக்கான யோகா பிரிவில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றேன். அந்த யோகா போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றேன். 

நேபாள நாட்டின் பொக்காரோ நகரில் கடந்த 14 ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை அந்த நாட்டின் (அரசுசாரா) விளையாட்டு அமைப்பான பி.சி.அகாதெமி (பொக்காரோ) மற்றும் இந்திய நாட்டின் (அரசுசாரா) விளையாட்டு அமைப்பான "யூத் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மெண்ட் அசோசியேஷன் ஆஃ ப் இந்தியா'  ஆகிய அமைப்புகள் இணைந்து சர்வதேச அளவிலான சிலம்பம், குத்துச்சண்டை, மல்யுத்தம், கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், யோகா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு  போட்டிகளை நடத்தியது. இப்போட்டியில் 19- வயதுக்கு உட்பட்டோருக்கான யோகா போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றேன். மேலும் இப்போட்டியில் ஒட்டுமொத்த வெற்றிக் கோப்பையை இந்திய அணியே கைப்பற்றினோம்'' என்றார்.           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com