

நாம் நலமுடன் இருக்கும்போதே செய்ய வேண்டிய முக்கிய பணிகளைப் பெரும்பாலானோர் அறிவதில்லை. ஆயுள் காப்பீடு, வங்கிக் கணக்கு, தபால் அலுவலக முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், ஓய்வூதியம் பெறுவதற்கும்,பங்கு முதலீடு வைத்திருப்பவர்களுக்கு சிறு ஆலோசனைகள்:
வாரிசு நியமனம் செய்யப்பட்டுள்ளதா? , வாரிசின் பெயர் ஆதார் அட்டை, பான் அட்டை , வங்கிக் கணக்கு ஆகிய மூன்றிலுமே சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
முகவரியில் மாற்றம் இருந்தால் உடனடியாக மாற்றவும். முகவரி அத்தாட்சி என்பது நீங்கள் இருக்கும் வீட்டுக்குதான்! இருந்த வீட்டுக்கு அல்ல!
நீங்கள் புதிய வீட்டுக்கு குடியேறினீர்கள் என்றால், அருகில் உள்ள தபால் நிலையத்துக்குச் சென்று ரூ.20 கட்டணம் செலுத்தி, போஸ்டல் ஐ.டி. எனும் படிவத்தை பூர்த்தி செய்து ரூ.100களில் கட்டணத்தைச் செலுத்தி புதிய வீட்டுக்கான முகவரி அத்தாட்சியை பெறலாம். அதைக் கொண்டு அனைத்து ஆவணங்களையும் மாற்றிக் கொள்ளலாம்.
திருமணமான பெண்கள் தங்களது கணவரின் பெயரை சேர்த்துகொள்கிறார்கள். அப்படி சேர்த்தால் உடனடியாக பான் அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவற்றிலும் அந்த மாற்றம் இடம்பெற வேண்டும்.
பெயர் மாற்றம் இருந்தால் அரசிதழில் மாற்றி வைத்துக்கொள்வது நல்லது. அதற்கு ரூ.415 மட்டுமே செலவாகும்.
வங்கியில் கணக்கு தொடங்கும் போதும் கணவன் மனைவி இருவருமே இயங்கும் படியான E or S (either or survivor) வைத்துக் கொள்வது நல்லது.
எந்தக் காரணம் கொண்டும் ஒருவர் இறந்த பிறகு அவரது வங்கிக் கணக்கில் எந்த பரிவர்த்தனை செய்யக்கூடாது. குறிப்பாக, ஏடிஎம் பின் நம்பர் தெரிந்திருந்தால் கூட பணம் எடுக்கக் கூடாது. வங்கிக் கிளையில் தெரிவித்து, முறைப்படி பணம் எடுக்கலாம்.
வங்கிக் கணக்கு துவங்கும்போது கணவன், மனைவி இருவரும் பரிவர்த்தனை செய்யும்படி கணக்கு துவங்க வேண்டும். வாரிசு பதிவு செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாரிசு பதிவு செய்யவில்லை என்றால் வங்கியில் இருக்கும் பணம் வாங்குவது மிகவும் கடினம்.
ஓய்வூதியம் பெறுவர் கணவன், மனைவி (இ அல்லது எஸ்) கணக்கு வைத்துகொள்ளலாம். ஆனால் குடும்ப ஓய்வூதியம் பெறுவர் வாரிசு மட்டுமே நியமிக்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது கண்டிப்பாக (mode of holding anyone or survivor) இருக்க வேண்டும்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தால், வங்கியில் டி. மேட் கணக்காக ஆரம்பிக்கவும்.
முக்கியமாக எல்.ஐ.சி. பாலிசி வைத்திருப்பவர்கள் முகவரி மாற்றம், வங்கி கணக்கு எண் மாற்றத்தை உடனடியாக மேற்கொள்ளவும். ஏனென்றால் எல்ஐசி மட்டுமே முதிர்வு தேதியன்று உங்கள் வங்கிக் கணக்கில் உங்களுக்கு சேர வேண்டிய தொகையை வரவு வைக்கும் அல்லது கடைசியாக பதிவு செய்த முகவரியில் பதிவுத் தபாலில் உங்கள் முதிர்வு விவரத்தை தெரிவிக்கும்.
தற்போது வசிக்கும் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடிபோயிருந்தால் கூட கேஸ், ரேஷன், எல்ஐசி பாலிசி, வங்கி கணக்கு, ஆதார் அட்டை, பான் அட்டை ஆகியவற்றை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக திருமணமாகாதவர்கள் அவர் கூடப் பிறந்தவர்களுடன் வங்கிக் கணக்கு (இ அல்லது எஸ்) வைத்துகொள்ளலாம்
நீங்கள் உங்கள் குடும்பத்தை நேசிப்பவராக இருந்தால் ஒருவேளை உங்கள் வருமானம் நின்று போனால் (விபத்து, வேலை இழப்பு, மரணம்) உங்கள் குடும்பத்தை பராமரிக்க பணத்தை கொடுக்கவும். இல்லையென்றால் மிக, மிக குறைந்த பிரிமியத்தில் காலக் காப்பீடு செய்து கொள்ளவும்.
இருசக்கர வாகனம் கார் வாங்கினால் அதை மட்டும் பெயர் மாற்றம் செய்துவிட்டு இன்ஷூரன்ஸ் மாற்றவில்லை என்றால் விபத்து நடந்தால் நஷ்ட ஈடு கிடைக்காது. வாகனம் ஒருவர் பெயரிலும் இன்சூரன்ஸ் வேறொரு பெயரிலும் இருந்தால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். பழைய வண்டி வாங்கும்போது அந்த ஓனரிடம் ஆர். சி. பெயர் மாற்றம் படிவங்கள் அனைத்தையும் வாங்கி பெயர் மாற்றாமலே வண்டி ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அப்படி ஓட்டும்போது அந்த ஓட்டுநர் விபத்தில் சிக்கினால், அவரது குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்டமாகும். இந்த 15 லட்சம் ரூபாய் காப்பீடு ஓட்டுநரும் உரிமையாளரும் ஒருவராக இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
பழைய வீடு வாங்கும்போது பத்திரப்பதிவு முடிந்தவுடன் அதை அத்தாட்சியாக வைத்து, மின்சாரம், கழிவு நீர், குடிநீர் இவற்றில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இப்பொழுது மின்சார வாரியம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றபோது, பல ஆண்டுகளாக மின் இணைப்பு மாற்றாமலே வீடு விற்றவர் பெயரில் இருப்பது தெரியவந்தது.
உபயோகித்துக் கொண்டிருக்கும் கைப்பேசி தொலைந்துவிட்டாலோ, அல்லது சிம் வேலை செய்யவில்லை என்றாலோ புது சிம் வாங்கும்போது அதே எண் அதே நிறுவன நெட்வொர்க் வாங்கவும். புதிதாக நம்பர் மாற்றினால் வங்கிக் கணக்கு ,கேஸ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமான வரி, இன்ஷூரன்ஸ், ஆர்டிஓ, குழந்தைகளுடைய பள்ளிக்கூடம் எல்லாவறுக்கும் பிரச்னை வரும். கைப்பேசி தொலைந்தவுடன் வாங்க வேண்டும். இல்லையென்றால் அந்த எண் வேற ஒருவருக்கு வழங்கப்பட்டு விடும்.
நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் விட்டு செல்வது போல உங்கள் சேமிப்புக் கணக்கையும் விட்டுவிட்டு செல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் குடும்பத்தாருடன் இணைந்து (இ அல்லது எஸ்) சேமிப்புக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். இது இன்சூரன்ஸ் பணம், பி.எஃ.ப் பணம் பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கும். பார்ப்பதற்கு எல்லாம் சிறு விஷயங்கள்தான்! இதில் எதில் சிக்கினாலும் உங்களுடைய பணம் விரயம் கால விரயமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.