'மக்களிடையே வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டைவாசிகளின் ஆதரவில் "மகாத்மா காந்தி நூல் நிலையம்' எழுபதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
அந்த நூல் நிலையத்துக்காக, தற்போது ஒரு புதிய கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய சாதனை'' என்று அதன் திறப்பு விழாவில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் குறிப்பிட்டார்.
இந்த நூல் நிலைய ஸ்தாபகரான காந்தியவாதி மகாலிங்கத்தின் மகன் நித்தியானந்தனிடம் பேசியபோது:
'சைதாப்பேட்டை தேரடி வீதியில் 1952-இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மூதறிஞர் ராஜாஜி பேசும்போது, "இன்று மகாத்மா நம்மிடையே இல்லை. அவரது நற்சிந்தனைகளைக் கடைபிடிக்க வேண்டிய, மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.
ராஜாஜியின் சொன்ன கருத்துக்கு செயல் வடிவம் கொடுக்க விரும்பிய என் தந்தை மகாலிங்கம், அதே ஆண்டில் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் தெருவில் "மகாத்மா காந்தி நூல் நிலையம்' என்று சிறியதாக ஆரம்பித்தார்.
நெசவாளர் குடும்பங்கள் மிகுதியாக வசித்த சைதாப்பேட்டையில் துவக்கப்பட்ட அந்த நூல் நிலையம் இன்று எழுபது ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 25 நூல்களோடு துவக்கப்பட்ட அந்த நூல் நிலையத்தில் இன்று 25 ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. அன்று உறுப்பினர்களுக்கு மாத சந்தா காலணா. இன்று மாதம் 90 ரூபாய்.
எங்கள் நூல் நிலையத்துக்கும், இதர நிகழ்ச்சிகளிலும் ராஜாஜி, காமராஜர், கக்கன், ம.பொ.சி., சி.சுப்ரமணியம், பா.ராமசந்திரன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 1958 பிப்ரவரியில் நூல் நிலையத்தில் காந்தியின் சிலையை அன்றைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். அந்தச் சிலை இன்றும் எங்கள் நூல் நிலையத்தில் இருக்கிறது.
"வீரபாண்டிய கட்டபொம்மன்' உள்ளிட்ட பல படங்களின் வசனகர்த்தாவான சக்தி கிருஷ்ணசாமி நூல் நிலையத்துக்கு பல வகையிலும் உதவிகள் செய்திருக்கிறார். அவரது அறிமுகம் காரணமாக தியாகராஜ பாகவதர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ், முத்துராமன், இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் நூல் நிலைய ஆண்டு விழாக்களில் பங்கேற்றுள்னர்.
சாண்டில்யன், அகிலன், ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், பெ.சு.மணி, அசோகமித்ரன், திருப்பூர் கிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவி பாலா, என்.சி.மோகன்தாஸ், படுதலம் சுகுமாரன் உள்ளிட்ட எழுத்தாளர்களும் ஆண்டு விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு காலகட்டத்தில் ராஜாஜி, கண்ணதாசன், தமிழ்வாணன், அகிலன், உமாசந்திரன் ஆகியோரும், அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் அவர்களின் வாரிசுகளான சி.ஆர்.நரசிம்மன், காந்தி கண்ணதாசன், லேனா தமிழ்வாணன், அகிலன் கண்ணன், நடராஜ் ஐ.பி.எஸ். ஆகியோரும் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பதைப் பார்க்கும்போது நூல் நிலையத்தின் சிறப்பை அறியலாம்.
இந்த நூல் நிலையத்தின் சேவையைப் பாராட்டி, எஸ்.ஆர். ரங்கநாதன் விருது, பாபாசி விருது, பாரதி இலக்கிய விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கட்டடத்தை கட்டி முடிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட, "குவிகம்' அமைப்பின் உறுப்பினர்களும், நண்பர்களும் நலன் விரும்பிகளுமாக ரூ.9 லட்சம் நன்கொடையாக வழங்கி இருப்பதை நினைத்தால் எனது நெஞ்சம் நெகிழ்கிறது'' என்கிறார் நித்தியானந்தம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.