'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய படங்களின் கவன ஈர்ப்பைத் தொடர்ந்து 'லெவன்' என்ற படத்தை உருவாக்கி வருகிறது ஏ.ஆர். என்டர்டைன்மென்ட் நிறுவனம். இயக்குநர் சுந்தர்.சி.யிடம் இணை இயக்குநராக இருந்த லோகேஷ் அஜில்ஸ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்', 'இன்ஸ்பெக்டர் ரிஷி' இணையத் தொடர், 'சரபம்', 'சிவப்பு' மற்றும் சசிகுமாரின் 'பிரம்மன்' உள்ளிட்டவற்றில் நடித்துள்ள இவர், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் எதிர் நாயகனாக தற்போது நடித்து வருகிறார். 'சில நேரங்களில் சில மனிதர்கள்'
படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, 'ஆடுகளம்' நரேன், 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார். இப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்...
''ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லராக இப்படம் அமையும். திறமைமிக்க நடிகர்கள்
மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்பு
கிறேன்'' என்று கூறினார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.