'ஒவ்வொரு அரசுத் துறைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. கல்வித் துறையின் நோக்கம் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி வழங்குவது; சுகாதாரத் துறையின் நோக்கம், தரமான மருத்துவ வசதிகளை அனைவருக்கும் வழங்குவது; வனத் துறையின் நோக்கம் வனங்களைப் பாதுகாப்பது.
இப்படி டாஸ்மாக் நோக்கம் என்ன... ? குடிகாரரை உருவாக்குவதா? நான் ஒருவன் குடிப்பதால் என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து விடும் என்பதெல்லாம் ஓவர் என்பது பல குடிகாரர்களின் எண்ணம். தன் போதையும் குடியும் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே இவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் போதை, இவர்களை மயக்கி, வீழ்த்தி சாத்தானின் சாலைக்கு இழுத்து வந்து விடுகிறது. அதன் பின் அந்தக் குடும்பம் என்ன ஆகிறது...?' என்று கேள்விகளால்
நிறைத்து கொண்டே இருக்கிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கர் சதாசிவம். 'உருட்டு உருட்டு'படத்தின் மூலம் குடியின் அவல நிலையை எடுத்து வைக்க வருகிறார். இயக்குநர் தங்கர்பச்சானிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர்.
குடி குடியை கெடுக்கும்... இதுதான் கதையின் உள்ளடக்கமா...?
நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ், அவருக்கு ஜோடி ரித்விகா ஸ்ரேயா இவர்களின் சின்ன பயணம், அதையொட்டி வாழ்க்கைதான் படம்.
வாழ்க்கையை உற்சாகமாக, ரசனையாகப் பார்க்கிறவன் கஜேஷ் நாகேஷ். ஒவ்வொரு நிமிஷத்தையும் நம்பிக்கையோடு கடக்கிற மனுஷி ரித்விகா ஸ்ரேயா. வறுமை, இயலாமை என இருந்தாலும் அன்பு மட்டுமே இவர்களின் பிரதானம்.
அழகு, பணம் என நம்முடைய அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி அன்பையும், அக்கறையையும் முன் வைக்கிற காதல். அவ்வளவு அற்புதமாக, அழகாக வாழ்கிற வாழ்க்கை ஒரு கட்டத்தில் சின்னா பின்னமாகிறது. குடிப் பழக்கமே இல்லாத கஜேஷ் நாகேஷ் கதாபாத்திரம், ஒரு கட்டத்தில் குடியின் கோரப் பிடியில்
சிக்குகிறது. அவன் வாழ்வு, குடும்பம் எல்லாமே குடி என்ற அரக்கனால் சபிக்கப்படுகிறது. ஒரு பெரும் சோகக் காவியத்தின் உணர்ச்சியும் உயிர்த்துடிப்பும் மிக்க அந்தக் கணங்களை எண்ணிப்பார்க்கவே மனம் நடுங்குகிறது.
எப்படி இருக்கும் படத்தின் திரை வடிவம்....? தங்கர்பச்சான் பாணி சினிமாவாக இருக்குமா...
கதையில் இருக்கிற அம்சம்தான் சீரியஸ். மற்றபடி எங்கெங்கும் நகைச்சுவை தோரணம். கதையின் கடைசி இருபது நிமிடங்கள் வேறு மாதிரி இருக்கும். இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக்கூட எங்கேயோ யாருடனோ விவாதிக்கவில்லை. எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த கண்ணீர், கண் கூடாகப் பார்த்த அம்சங்கள்... இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான்.
ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். 'நம்மை கடந்து போகிற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா' என்பது ஹாலிவுட் இயக்குநர் டிஸிகாவின் கோட். இது எவ்வளவு உண்மை? நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தக் கதை.
எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது.
விமர்சிக்கிற விதமாகத்தான் இந்த மாதிரியான கதைகளைச் சொல்ல முடியுமா...
ஆமாம், கண்டிப்பாக விமர்சனம் இருக்கிறது. இன்றைக்கு வீட்டுக்கு இரண்டு குடிகாரர் லட்சியம்; ஒருவர் நிச்சயம்' எனக் கோட்பாடு நிலைதான் வகுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் மிகக் கடுமையாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊர்களில் கூட விடாப்பிடியாக மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சுற்றியுள்ள விவசாயக் கிராமங்களில் ஒன்று கூடும் இடம். மாலை நேரமாகிவிட்டால் ஆற்றுப்பாலம் எங்கும் கூட்டம் மொய்க்கும். ஒரு கடை போதாது என்று மொத்தம் மூன்று கடைகள் முழுக்க விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் நிறைந்த பகுதி என்பதால், மூன்று கடைகளிலும் கூட்டம் அதிகம். ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றால், குடிகாரர்களுக்கு அதுதான் திறந்தவெளி பார். ஆற்று மணலில் அமர்ந்து ஏகாந்தமாகக் குடிப்பார்கள். இதை சொல்லாமல் சினிமா ஒதுங்குவது சரியாக இருக்குமா....
நடிகர்களின் பங்களிப்பு எப்படி...?
நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கெனவே சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான். இருந்தாலும், இந்தப் படம் அவருக்கு புது அனுபவம். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா,
சின்னாளம்பட்டி சுகி, பாவா
லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், 'அங்காடித்தெரு கருப்பையா' இப்படி ரசிகர்களுக்கு பரிச்சய முகங்கள் பொருத்தமாக நடிக்கின்றனர். வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் எல்லோருக்கும் இந்தக் கதையில் இருக்கிறது. இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்லாம் சரியாக பொருந்தி வந்தால் இந்தக் கதை ஒவ்வொருவரின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.