
கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் பல பகுதிகளையும் கைப்பற்றி ஆட்சி புரிய ஆரம்பித்தவுடன் இங்கிலாந்திலிருந்து பல தரப்பட்டவர்கள் இங்கு வேலைக்கு வந்தார்கள். அதில் கல்வியாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், கட்டக் கலைஞர்கள், போதகர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு.
புதிய நாட்டில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் வேலையோடு சொந்த ஈடுபாட்டின் படி கலை, இலக்கியம், வரலாறு, மொழி, நாட்டுப்புறக் கதைகள், நாடோடிப் பாடல்கள் என்று தொகுக்க ஆரம்பித்தார்கள்.
அதுவும் தமிழ்நாட்டில் இம்மாதிரியான தொகுப்பு முயற்சியிலும் கலைகள், கைத் தொழில்கள், சமூக வரலாறு என்று எழுதியதோடு ஆய்வுகளுக்கும் அடிப்படைத்தளம் அமைத்துக் கொடுத்தார்கள்.
அவர்களில் முக்கியமானவர் இந்தியாவின் முதல் சர்வே ஜெனரலாக இருந்தவரும், நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், சரித்திர ஆவணங்கள் தொகுத்தவருமான கர்னல் காலின் மெக்கன்சி ஆவார்.
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் பல சுதேசி மன்னர்களோடு கடினமான போர்களை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் , 1783-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்துக்கு மேற்கே உள்ள ஹீபர்டீஸ் தீவிலிருந்து தனது இருபத்தொன்பதாவது வயதில் காலின் மெக்கன்சி சென்னைக்கு வந்தார். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பொறியாளராக பணியில் அமர்ந்தார். வாரன் ஹேஸ்டிங்ஸ் நடத்திய சில போர்களில் பங்கேற்றார்.
அவற்றில் முக்கியமானது திப்பு சுல்தானுடன் நடைபெற்ற போராகும். ஸ்ரீரங்கப்பட்டண கோட்டையைக் கைப்பற்றியதில் மெக்கன்சிக்குப் பெரும் பங்குண்டு. கோட்டையின் எதிரில் நேராக பீரங்கிகளை அமைத்து, திப்புவின் பீரங்கிகளை ஊமையாக்கினார். கோட்டைக்குள் நுழைய வழி கிடைக்குமா என்று ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயருக்கு ராஜ பாதையை அமைத்துக் கொடுத்தார்.
1783-இல் பொறியாளராக அமர்ந்த மெக்கன்சி சிறுகச் சிறுக முன்னேறினார். அப்போது நிலவிய எல்லாப் போர்களிலும் பங்கு பெற்றார். சரித்திரம், பூகோளம், புள்ளி விவரம் இவ்வளவும் குழைந்தது இவர் பணி.
1810 -இல் மெக்கன்சிக்கு சர்வேயர் ஜெனரல் பதவி எட்டியது. அத்துறையில் மெக்கன்சி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதன் காரணமாக அவர் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.
தனது 58-ஆவது வயதில் ஜாவா சென்றவர் ஒரு டச்சுப் பெண்மணியை மணந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பி விட்டார். கொல்கத்தா வந்து இறங்கி காசி, லெட்சுமணபுரி, அயோத்தி, ஆக்ரா, தில்லி என்றெல்லாம் சுற்றினார். ஆயினும் மெக்கன்சியின் மனம் என்னவோ தென்னிந்தியாவையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மெக்கன்சிக்கு உதவியாளர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? மூன்றே பேர் மட்டுமே!
நில அளவைத் துறையில் மெக்கன்சி பல ஆண்டுகள் பணியாற்றினார். இதன் காரணமாகவும் பல இடங்களுக்குப் பயணம் செய்ய நேரிட்டது. அவ்வாறு பயணம் செய்த பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுக்களையும், ஓலைச் சுவடிகளையும் பெருமளவில் திரட்டினார். அதோடு, அவரோ விடைத்தாள் ஒன்றை விநியோகித்து கிடைத்த விடைகளைத் தொகுத்தார்.
பல மொழிகளில் சுவடிகள் இருந்தன. நாட்டுப்புறக் கதைகளைக் கூட அப்படியே கிராமீயப் பாணியில் பதிவாக்கி கொண்டார்.
ஒரு சமயம் அரிய சுவடிகளையும் சின்னங்களையும் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவு செய்து வாங்கினார் என்றால் எவ்வளவு ஈடுபாடு இருக்க வேண்டும்.
இவரிடம் இருந்த மூன்று உதவியாளர்களும் சாமானியர் அல்ல. காவலி வெங்கட போரய்யா என்பவர் பழங்காசுகள் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். பல மொழிகளில் வல்லவராய் திகழ்ந்த லட்சுமய்யா பல அரிய ஓலைச்சுவடிகளையெல்லாம் மொழி பெயர்த்தார். மூன்றாவது உதவியாளரான அப்துல் அஜீஸ் என்பவர் பாரசீக மொழி ஆராய்ச்சியாளராக விளங்கினார்.
இவர்களுக்கு உதவியாக இருந்த பசவய்யா கன்னட மொழி வல்லவராகவும், சிவராமய்யா என்பவர் சமஸ்கிருத பண்டிதராகவும் இருந்தார். இவர்களது பணி மிகவும் உயர்ந்ததாக இருந்தது. மெக்கன்சி தலைமையில் அரும்பணியாற்றினார்கள்.
இப்படிப்பட்ட அருமையான, திறமை வாய்ந்த உதவியாளர்களை வைத்துக் கொண்டு எத்தனையோ சரித்திரப் புதையல்களை 40-ஆண்டுகள் சேகரித்தார் மெக்கன்சி.
மெக்கன்சி தம் வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிந்து சேகரித்த வரலாற்றுச் சான்றுகள் ஏராளம். அரிய நூல்கள், சுவடிகள், கல்வெட்டுகள், நாணயங்கள் என எண்ணற்றவை. கடந்த காலம் என்பதைச் சமூக சரித்திரமாகவும், மக்கள் வாழ்க்கையையும், பேசப்பட்ட மொழியையும் எழுதித் தொகுக்கப்பட்ட முறையையும் காலின் மெக்கன்சியின் தொகுப்புகள் வழியாக அறியலாம்.
இவற்றிக்கு 'மெக்கன்சி தொகுப்பு' என்றே பெயரிட்டார்கள். இப்படி 40-ஆண்டுகளுக்கு மேல் தமிழக வரலாற்றுப் பொக்கிஷங்களைத் தேடிச் சேகரித்து தொகுத்து அரும்பணியாற்றிய மெக்கன்சி, 1821-ஆம் ஆண்டு உடல் நலம் குன்றி படுக்கையில் விழுந்தார். அடுத்த ஆண்டே இறந்தும் போனார்.
மெக்கன்சியின் மனைவிக்கு வரலாற்று பொக்கிஷத்தின் அருமை, பெருமை தெரியும். கணவனின் அற்புதமான சேகரிப்பையெல்லாம் கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்களிடமே பேரம் பேசிய ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டார்.
ஏராளமான வடமொழி, அரபி, பாரசீகச்சுவடிகள், அரிய நூல்கள், காசுகள், பிரதிமங்கள் என அனைத்தையும் இங்கிலாந்துக்கு கொண்டு போனார்கள். அங்கு லண்டன் மாநகரில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில அவை அடைக்கலம் புகுந்தன.
இந்தியாவிலேயே தங்கி விட்ட தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாள, சமஸ்கிருத சுவடிகள் சென்னை கீழ்த்திசை சுவடி நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.
கர்னல் மெக்கன்சி இல்லா விட்டால், இந்தியாவின் எத்தனையோ அரிய சரித்திரப் புதையல்கள் அழிந்து போயிருக்கும்.
டி.எம். இரத்தினவேல்