கனடாவின் க்யூபெக் மாகாணத்தில், மாண்ட்ரியல் தீவின் மேற்குப் பகுதியில் பெட்ரோட் தீவில் அமைந்துள்ள நகரம் 'டெராஸ் வாட்ரூயில்'. இந்தச் சிறிய நகர்மன்றம் நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு தீர்மானமானது, உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நகரமானது 'மரங்கள் உயிருள்ள ஜீவன்கள்; அவற்றுக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளன' என்பதை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது.
1952-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் அமைக்கப்பட்ட இந்த நகரில் உள்ள 830 குடியிருப்புகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இரண்டு மலைகளுக்கு இடையே ஏரியையொட்டி இந்த அழகிய நகரம் உள்ளது.
இதுகுறித்து மேயர் மைக்கேல் போர்டியு கூறியது:
'மரங்கள் நமது மிகப் பெரிய நண்பர்கள். அவை நகர வெப்பத்தைக் குறைக்கின்றன, காற்றைத் தூய்மைப்படுத்துகின்றன, மழைநீரை நிர்வகிக்க உதவுகின்றன, பல்லுயிர் வளத்தைப் பாதுகாக்கின்றன. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நமக்கு மிகப் பெரிய துணை மரங்கள்தான். அவை வெறும் அலங்காரமாக அல்ல, உயிருள்ள ஜீவன்களாக மதிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அவற்றுடன் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள 'மரங்களுடன் ஒற்றுமை, சகோதரத்துவ உணர்வுடன் மனிதர்கள் செயல்பட வேண்டும்' என்ற வாசகம், மனிதர்களும் இயற்கையும் ஒன்றோடொன்று சார்ந்தவை என்ற தத்துவத்தை வலியுறுத்தும்'' என்கிறார்.
மரங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள்
வாழ்வதற்கான உரிமை, இயற்கையாக வளர்வதற்கான உரிமை, உடல் முழுமையுடன் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை, சேதமடைந்தால் அல்லது வெட்டப்பட்டால் மீளுருவாக்கம் பெறும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தீர்மானத்தின்படி மரங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
'இந்த உரிமைகள் மரங்களை வெறும் சொத்தாக அல்லாமல், பாதுகாக்கப்பட வேண்டிய உயிருள்ள இயற்கை அங்கங்களாகக் கருதவேண்டும்' என்பதைக் குறிப்பிடுகின்றன. உலக அளவில் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் உள்ளாட்சி அமைப்பு இதுவேயாகும்.
க்யூபெக் திரைப்பட இயக்குநர் ஆன்ட்ரி ரிசோரியஸ் தயாரித்த 'மரங்களும் கலைகளும்' என்ற ஆவணப்படம், இந்த முயற்சிக்கு முக்கியத் தூண்டுதலாக அமைந்தது.
இந்த ஆவணப்படத்தில், 'மரங்கள் சுவாசிக்கின்றன, தண்ணீரை உறிஞ்சுகின்றன, வேர்களின் மூலம் ஒன்றோடொன்று தகவல் பரிமாறுகின்றன, சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கின்றன என்பது அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய விழிப்புணர்வால் பொதுமக்கள், நகர சுற்றுச்சூழல் குழு இணைந்து நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டனர்.
'தேவையில்லாமல் மரங்களை வெட்டக் கூடாது. நகர வளர்ச்சித் திட்டங்களில் மரங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பழைய மரங்களைப் பாதுகாக்க வேண்டும்.
வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், புதிய மரக்கன்றுகளை நட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை அரசும் மக்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இது மரங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள அனைத்து சட்ட உரிமைகளையும் வழங்குவது அல்ல; மாறாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தும் கொள்கை அறிவிப்பாகும்.
'மரங்களைப் பாதுகாக்கும் நகராட்சி விதிமுறைகள் திருத்தப்படும். தேவையில்லாத மரவெட்டுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும். வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் மாற்றாக புதிய மரங்கள் நடப்படும். மரக்கவசப் பரப்பு அதிகரிக்கப்படும். பொதுமக்களுக்கு மரநடுகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்'' என்று நகராட்சித் துறையினர் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெற்றோா்: 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க நீதித் துறை நடுவா் மன்றங்களுக்கு உத்தரவு
நடைபாதை அடிப்படை உரிமை!

வாக்களிக்கும் உரிமையையும் ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தால் என்ன? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி







