தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்துக்கு உள்பட்ட கின்னரசானி, கஞ்சனபள்ளியில் உள்ள விளையாட்டுப் பள்ளிகள், கோத்தகுடெம், தம்மபேட்டாவில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப் பள்ளிகள், கம்மம், பால்வோஞ்சாவில் உள்ள இரண்டு சிறப்பு 'கேலோ இந்தியா' மையங்கள் ஆகியவற்றின் மூலம் வில் வித்தைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இங்குள்ள பழங்குடியின சிறார்கள் வில் வித்தை போட்டிகளில் 150 - க்கும் அதிகமாக தேசிய அளவிலான தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமான பி. சங்கரய்யா, ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவர் கூறியது:
'பழங்குடி சமூகத்தினரின் அன்றாட வாழ்வில் முக்கிய அங்கம்தான் 'வில்'. அந்தப் பாரம்பரியத் திறன் அவர்களை அம்பு எய்வதில், சாதனையை உருவாக்க உதவுகிறது.
சரியான வாய்ப்புகள், முறையான பயிற்சி, வழிகாட்டுதல் இல்லாதது அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. கிராமப்புற, பழங்குடியினத்தவர்களின் திறமைகளைக் கண்டறிந்து, சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு அறிவியல் பூர்வமான பயிற்சியை வழங்க வேண்டும்.
இவர்களில் திறமையான இளைய தலைமுறையினரைக் கண்டுபிடித்து, பயிற்சிகளை அளிக்கிறேன். நான் பயிற்சி அளித்த விளையாட்டு வீரர்களில், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல் சர்வதேச வில்வித்தை பதக்கம் வென்றவரான ஜி. மொரப்பாவும் ஒருவர்.
கோத்தகுடத்தைச் சேர்ந்த அனிகா துர்கையா தேசிய சாதனையாளராகத் திகழ்வதுடன், அகில இந்தியப் பல்கலைக்கழக அளவிலான வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். கரம் கனகையா 2010-இல் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அவந்திகா, லோஹிதா ஸ்ரீ ஆகியோர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தெலங்கானாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பலர் மாநில, மண்டல அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
2036-இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ள நிலையில், வரும் ஆண்டுகள் வில் வித்தை பயிற்சிகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒலிம்பிக்ஸ் தரநிலைகளை அடைய, ஒரு பயிற்சியாளருக்குக் குறைந்தது 10 ஆண்டுகாலத் தொடர் பயிற்சி, ஒழுக்கம், உடல் தகுதி, மன உறுதி ஆகியவை தேவை. அவை எங்கள் பயிற்சிகளின் முக்கிய அங்கங்களாக அமைந்திருக்கின்றன.
இளம் வில்வித்தை வீரர்களுக்கு, வெற்றி என்னும் இலக்கை அடைவது இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால், வில்லும் அம்பும் நீண்ட காலமாக அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகத் திகழும் கம்மம் மாவட்டத்தில், அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. சர்வதேச அரங்கில் வில் வித்தையில் இந்தியா முக்கிய இடத்தை வரும் நாள்களில் பிடிக்கும்'' என்கிறார் சங்கரய்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








