சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வெளிச்சத்துக்கு வந்த ஆபத்பாந்தவன்

இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை கரைசேர்த்து வெளிச்சத்துக்கு வந்த ஆபத்பாந்தவனாய் திகழ்கிறார் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்.

News image
Updated On :7 மார்ச் 2026, 10:31 pm

ப. சுஜித்குமார்

இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை கரைசேர்த்து வெளிச்சத்துக்கு வந்த ஆபத்பாந்தவனாய் திகழ்கிறார் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா-இலங்கையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன.

லீக் சுற்று முடிந்து, சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் முக்கியமான வாழ்வா, சாவா ஆட்டமாக இந்திய-மே.இந்திய தீவுகள் ஆட்டம் அமைந்திருந்தது. முதலில் ஆடிய மே.இந்திய தீவுகள் 196 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி தடுமாறிய நிலையில், சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் விளாசிய 97 ரன்கள் இந்தியாவைக் காப்பாற்றி, அரையிறுதிக்குக் கொண்டு சேர்த்தது. அதில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் ஸ்ட்ரைக் ரேட் 194 ஆக இருந்தது சிறப்பாகும்.

ஆபத்பாந்தவன் சஞ்சு

உலகக் கோப்பை போட்டியில் அபாரமாக ஆடி அணியை கரை சேர்த்த ஆபத்பாந்தவனாய் திகழும் சஞ்சு சாம்சன் தற்போது நாடு முழுவதும் ரசிகர்களால் போற்றிப் புகழப்படுகிறார். கடந்த 15 மாதங்களாக சஞ்சு சாம்சனின் ஆட்டம் வீழ்ச்சியில் இருந்தது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முக்கிய நட்சத்திர வீரரான சஞ்சு சாம்ஸன், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அடுத்த விழிஞ்சம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

2015-ஆம் ஆண்டு டி20-இல் அறிமுகம் செய்யப்பட்ட சஞ்சு இதுவரை 59 ஆட்டங்களில் தான் ஆடியுள்ளார்.

2025-இல் இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப் பயணத்தின்போது, சஞ்சு சாம்சன் ஆட்டம் சோபிக்கவில்லை. வேகப்பந்து வீச்சு சமாளிக்க முடியாமல் போனது. நிகழாண்டும் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரிலும் சஞ்சு சோபிக்கவில்லை. இதனால் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவதில் சிக்கல் நிலவியது. அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

பலமுறை பதிலியாகவும் இடம் பெறும் நிலையில் தான் சஞ்சு சாம்சன் இருந்தார். இந்த உலகக் கோப்பைக்கான அணியில் முதல் ஓபனராகச் சேர்க்கப்பட்டார். ஆனால் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டதும் சஞ்சுவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், மே. இந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு விஸ்வரூபம் எடுத்தார்.

இஷான் கிஷன்-அபிஷேக் சர்மா சொதப்பிய நிலையில், அணியைக் காப்பாற்றும் பொறுப்பு சஞ்சு தலையில் விழுந்தது. நிலைமை உணர்ந்து ஆடிய சஞ்சு அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். வெற்றி பெற்றவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சன், மும்மதங்களின் வழிபாட்டு முறையையும் கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வெற்றிக்குப்பின் சஞ்சு கூறுகையில்: 'என் மீதே தொடர்ந்து எனக்கு சந்தேகம் இருந்தது. என்ன ஆகும்? என்ன ஆகும்? எனினும் தன்னம்பிக்கையுடன் ஆடினேன். கடவுள் அருளால் வெற்றிக்கு உதவினேன்.மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்தேன். இதனால் ஷாட்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்து ஆடினேன். பேட்டிங் ஸ்டைலில் பெரிய மாற்றம் செய்யவில்லை. வழக்கமான பாணியிலேயே ஆடினேன். என்னையே முழுமையாக நம்பினேன். சமூக வலைதளங்களைக் கூட பயன்படுத்தாமல் கைப்பேசியை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன்.

எனது அனுபவமே துணையாக அமைந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், பதற்றம் இல்லாமல் ஆடி ஸ்கோரை அடைய வேண்டும் என்ற இலக்குடன் ஆடினேன். சேஸிங் கடினமாக இருந்தாலும் நமது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் நாட்டுக்காக சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது குறித்து கனவு கண்டேன். அது கடவுள் துணையுடன் நனவும் ஆகியது.'' என்றார்.

ரூ.6 கோடியில் வீடு ஆபத்பாந்தவன் சஞ்சு சாம்சனுக்கு திருவனந்தபுரத்தில் ரூ.6 கோடியில் பழைமை, புதுமை மாறாமல் கட்டப்பட்ட வீடு சொந்தமாக உள்ளது. இங்கு தனது மனைவி சாருலதாவுடன் வசித்து வருகிறார் சஞ்சு. கல்லூரி நாள்களில் சாருலதாவை காதலித்து கரம் பிடித்தார் சஞ்சு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.