ஐம்பெரும் காப்பியங்களுள் கம்பராமாயணம்
ஏன் இடம்பெறவில்லை?
சமயப் பூசலே காரணம்
காப்பியம்' என்பது "காவியம்' என்பதன் வட சொல்லின் திரிபு ஆகும். ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு பிற்காலத்தில் தோன்றியது என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் இலக்கிய வரிசை போல பிற்காலத்தில் ஐம்பெருங்காப்பியங்கள் என்னும் வரிசையும் வழங்கிவரத் தொடங்கியது.
வடமொழியில் நைடதம், ரகுவம்சம், குமாரசம்பவம்,, கிராதர்ஜுனியம், சிசுபாலவதம் ஆகிய ஐந்தும் ஐம்பெருங் காப்பியங்களாக விளங்கின. அந்த வடமொழி மரபைப் பின்பற்றியே தமிழில் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் வகைப்படுத்தி உள்ளனர். வடமொழி மரபைப் பின்பற்றி காப்பிய வகைப்பாடு செய்து இருப்பதால் காப்பியத் தகுதி இல்லாத நூல்களையும் காப்பியம் என்று கூறுகிற போக்கைக் காணமுடிகிறது.
வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடியொற்றி, கம்பர் ராமாயணத்தை திருந்திய வடிவில், காவிய இன்பத்தோடு வளம் பொருந்தியதாக அமைத்துள்ளதை,
""நாரதன் கருப்பஞ் சாறாய் நல்ல வான்மீகன் பாகாய்
சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன்
பார் அமுது அருந்தப் பஞ்ச தாரையாய்ச் செய்தான் கம்பன்
வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருந்தினானே''
(மிகை:28)
என்ற பாடல் நமக்கு உணர்த்துகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என நாம் கம்பராமாயணத்தின் காலத்தை வரையறுத்தாலும் அதன் வடிவமும், கம்பரின் கவிதை நயமும் எக்காலத்துக்கும் இன்பத்தை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையாகாது.÷
கம்பராமாயணம் தோன்றிய காலத்தில் சமண, பெüத்த சமயக் கருத்துகளே மேலோங்கி இருந்தன. "வீடுபேறு' என்ற தத்துவமே சமயத்தில் சிறப்பாகக் கொள்ளப்பட்டது. தமிழில் உள்ள சிலப்பதிகாரம் முதலிய ஆரம்பகாலக் காப்பியங்கள் யாவும் சமண, பெüத்தக் காப்பியங்களாக இருந்ததால் அவை ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறத் தகுதியானதாகக் கொள்ளப்பட்டது. மேலும், கம்பரை அவர் வாழ்ந்த காலம் எளிதாக ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழல் இருந்தது. அது அவரைத் தனித்துவப்படுத்தியே காட்டியது. இதுபற்றி கம்பரே வருந்திக் கூறியுள்ளார் என்பதை ராமாவதாரம் தற்சிறப்புப் பாயிரம் எடுத்துக் கூறுகிறது.
ஐம்பெருங்காப்பியங்களுள் இருந்து கம்பராமாயணம் புறந்தள்ளப்பட்டதற்கு மேற்சுட்டிய காரணங்களே பொருத்தமாக இருக்கிறது.
ஐம்பெருங்காப்பியங்களாக விளங்கக்கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய இவை ஐந்தும் சமண, பெüத்தக் காப்பியங்களாகவே இருக்கின்றன. இதனால், அக்காலத்தில் சமணமும் பெüத்தமும் தழைத்தோங்கியது என்பதை உணரமுடிகிறது. மேலும், கம்பரது வைதீக நெறி கம்பராமாயணத்தில் பிரதிபலித்தது. அதனாலேயே இதைச் சமணர்களும் பெüத்தர்களும் ஏற்கவில்லை. சமயப் பூசல் காரணமாகவே கம்பராமாயணம் ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!






