கடந்த ஆறு வாரமாக நடக்கும் சொல் வேட்டை, பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று, எங்கெங்கோ தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் குடத்தில் இட்ட விளக்கு போல், முகவரி தெரியாமல் தங்களை ஒடுக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே. சொல் வேட்டையின் மூலம் புதுச்சொற்களைப் போலவே, அவ்வறிஞர்களும் வெளிக்கொணரப் பட்டால், அது நமக்கு மிகப் பெரிய மகிழ்வைத் தரும். எனவே, சொல் வேட்டையை வாரந்தோறும் படித்து மகிழ்ந்த அல்லது படித்த பின் மாற்றுக் கருத்து கொண்ட அனைவரும், தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய ஒரு மேடையாகவோ, மன்றமாகவோ இத்தொடரைப் பயன்படுத்திக் கொண்டால், அது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டாக அமையும். ஆகவே, வாரந்தோறும் தொடர்ந்து நம்மோடு களத்தில் இறங்கும் வாசகர்களைப் போலவே, இன்னும் பலரும் நம்மோடு பயணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு, இந்தவார வேட்டைக்கு வருவோம்.