/

இரு கோல் குறிநிலை

பத்துப்பாட்டு நூல்களுள் நக்கீரர் எழுதிய "நெடுநல்வாடை' என்னும் நூலில் வரும் பாடலில் "இருகோல் குறிநிலை' என்ற சொற்றொடர் வருகிறது. அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

News image
Updated On :8 ஜூன் 2013, 7:38 pm

முனைவர் ப.பாண்டியராஜா

பத்துப்பாட்டு நூல்களுள் நக்கீரர் எழுதிய "நெடுநல்வாடை' என்னும் நூலில் வரும் பாடலில் "இருகோல் குறிநிலை' என்ற சொற்றொடர் வருகிறது. அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

பாண்டிய மன்னனுக்கு அரண்மனை உருவாக்குவதற்காக, முதலில் நூல் கயிறிட்டு இடம் குறிக்க, ஒருநாள் நண்பகலில் உச்சிப்பொழுதில் வேலையைத் தொடங்குகிறார்கள்.

""....... ...... ....... மாதிரம்

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்

இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு

ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து -

(நெடு 72-75)

இதன் பொருள்: "திசைகள்(எல்லாவற்றிலும்) விரிந்த கிரணங்களைப் பரப்பிய அகன்ற இடத்தையுடைய ஞாயிறு, இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும் வகையில், மேற்கே செல்வதற்காக, ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்) நண்பகல் நேரத்தில்' - என்பதே.

உச்சிப்பொழுதை(நண்பகல்) மிகச் சரியாகக் கணிப்பதற்கு அன்றைய தமிழகத்தில் ஒரு சிறிய கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வட்டமான கல் அல்லது மரப்பலகையில், அதன் விட்டத்தின் இரு முனைகள் அருகிலும் இரண்டு கோல்களைச் செங்குத்தாக நட்டிருக்க வேண்டும். இந்தக் கோல்கள் சரியாக வடக்கு-தெற்கு திசையில் இருக்கும்வண்ணம் வட்டத்தை, ஒரு திறந்தவெளியின் சமதரையில் வைத்திருக்க வேண்டும். காலையில், இந்தக் கோல்களின் நிழல்கள் மேற்குப்புறமாகச் சாய்ந்த இணைகோடுகளாகத் தெரியும். நேரம் செல்லச் செல்ல இந்த இணைகோடுகள் கிழக்கு நோக்கி நகரும். சரியாக 12 மணிக்கு, இந்த இணைகோடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே நேர்கோடு ஆகும். பின்னர், மாலையில் அவை மீண்டும் பிரிந்து கிழக்குப்புறமாகச் சாய்ந்த இணைகோடுகள் ஆகும். சென்னையில் எடுக்கப்பட்ட படங்கள் இதனை விளக்கும்.

இவற்றில் நடுவில் இருக்கும் படமே இருகோல் குறிநிலை வழுக்காது ஒருதிறம் சாரா என்ற நிலையைக் குறிக்கும்.

மன்னனின் அரண்மனையைக் கட்டும் வேளையில், முதலில் மனைவகுக்க சரியான நண்பகல் நேரத்தில், தெய்வத்தைத் தொழுது, நூலடித்துக் கட்டி வேலையை ஆரம்பிக்கிறார்கள். இதைத்தான் புலவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதற்கு நச்சினார்க்கினியர் என்ன உரை எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம்.

ஆனால் அதற்கு முன்னர், "நண்பகலில், ஞாயிறு தலைக்கு நேர் மேல் இருக்கும்போது, செங்குத்தாக நடப்பட்ட ஒரு கோலுக்கு நிழல் விழுமா?' என்ற ஐயம் பலருக்கும் ஏற்படக்கூடும். விழும். அதாவது, நண்பகலில் ஞாயிறு நம் தலைக்கு நேர் மேலே உச்சிப்புள்ளியில் ஆண்டுக்கு இரு முறைதான் வரும். சித்திரை மாதத்தில் ஒரு நாளும், ஆடி-ஆவணி மாதத்தில் ஒரு நாளுமே. அதுவும், இடத்திற்கேற்றபடி மாறும். இப்பாடலில் குறிப்பிடப்படுவது மதுரை என்பதால், மதுரைக்கு (10 க்ங்ஞ்ழ்ங்ங் சர்ழ்ற்ட் கஹற்ண்ற்ன்க்ங்) உரிய நாள்கள் சித்திரை 15 (அல்ழ்ண்ப் 28), ஆடி 31(அன்ஞ்ன்ள்ற் 16). மற்ற நாள்களில் ஞாயிறு நண்பகலில் தலைக்கு நேர் மேலே உள்ள நடுப்பெருவட்டத்தில் சற்று வடக்குப் பக்கமாகவோ, தெற்குப் பக்கமாகவோ சாய்ந்து இருக்கும். இதில் ஓரொரு நாள்கள் முன்-பின் இருந்தால் பெரிய மாறுபாடு தெரியாது. எனவே, ஐந்து நாள்கள் முன்னரும் பின்னரும் எடுத்துக்கொண்டால், சித்திரை 10 முதல் 20 வரை, மதுரையில் நண்பகலில் தலைக்கு நேர் மேலே ஞாயிறு இருக்கும். அப்போது செங்குத்தாக நடப்பட்ட கோலில் நிழல் விழாது.

இதனை ஒட்டியே நச்சினார்க்கினியரும் இதற்கு உரை எழுதுகையில், ""இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா நிழலால் தாரைபோக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்கொள்ளும் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச் சாரப்போகாத சித்திரைத் திங்களின் நடுவிற் பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தா நாழிகையிலே அங்குரார்ப்பணம்(திருமுளைச்சார்த்து) பண்ணி'' என உரை எழுதியுள்ளார். இதற்கு விளக்கவுரை எழுதிய "பெருமழைப்புலவர்' சோமசுந்தரனார், ""சித்திரைத் திங்கள் பத்தாநாள் தொடங்கி, இருபதாநாள் முடிய நிகழும் நாட்களில் யாதாமொரு நாள்'' எனக் கூறுகிறார்.

இந்த நாள்களில், ஞாயிறு கிழக்கிலிருக்கும்போது மேற்குப்பக்கம் சாய்ந்திருக்கும் நிழல், நேரம் செல்லச் செல்லக் குறைந்து, நண்பகலில் கோலுக்கு நேர் கீழே மறைந்து, பின்னர் ஞாயிறு மேற்கில் செல்லும்போது கிழக்குப் பக்கமாக நீழும். ஆனால், இதற்கு இரண்டு கோல்கள் தேவையில்லையே இதுவே புலவரின் எண்ணமாயும் இருந்திருந்தால், "ஒரு கோல் குறிநிலை' என்றுதான் கூறியிருப்பார்.

புலவர் கூறியிருப்பது இத்தகைய வட்டத்தில் அமைந்த இருகோல் குறிநிலையே என்பதற்கு வலுவான மற்றொரு ஆதாரமும் உண்டு.

மொகஞ்சாதாரோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, 5000 ஆண்டுகட்கு முன்னர் இருந்த மக்களின் உயர்ந்த நாகரிகத்தைப் பற்றியது அது. அங்கே நடந்த அகழ்வாராய்ச்சியில் பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, ஒரு வட்டமான கல். சிறுவர் உருட்டும் வண்டியின் சக்கரத்தைப் போன்று, நடுவில் ஒரு பெரிய துளையுடன் உள்ளது. அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு சிறு பள்ளங்கள் உண்டு.

முதலில் இதனை ஆய்ந்தோர் இதனை ஒரு சிறுவர் விளையாட்டுப் பொருள் எனக் கூறிவிட்டனர். ஆனால், இதனை மறு ஆய்வு செய்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த மவுலா என்ற அறிஞர், இது ஒரு வானியல் கருவி என்று கூறுகிறார். அந்த இரு சிறு பள்ளங்களிலும் இரண்டு குச்சிகளைச் செங்குத்தாக நட்டு வைத்துச் சூரியனின் அன்றாட ஓட்டத்தைத் துல்லியமாக அளக்க இதனைப் பயன்படுத்தினர் என்று கூறுகிறார். மேலும், அதில் காணப்பட்ட வரிசையான சிறிய பள்ளங்களிலும் குச்சிகளை நட்டு, ஆண்டின் பருவகால மாற்றங்களையும் கண்டறிந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். "வானியல் பேசும் வட்டக்கற்கள்' என்று 1980-இல் "தினமணி'யில் செய்தியாக அது வெளிவந்திருக்கிறது. எனவே, சிந்துசமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய அந்த வட்டக்கற்களே தமிழ்நாட்டிலும், ஞாயிற்றின் அன்றாட ஓட்டத்தை அளக்கப் பயன்பட்டது எனக் கொள்ளலாம். நெடுநல்வாடைப் புலவர் நக்கீரர் கூறும் இருகோல் குறிநிலை என்பதுவும் இதைப் போன்றதொரு கருவியின் மூலம் கண்டறியப்பட்டதே என்பது தெளிவு. எனவே, ஒருதிறம் சாரா அரைநாள் அமயம் என்பது ஒவ்வொரு நாளும் அமையும் அமயம் என்றும், அப்படி ஏதோவொரு நாளில் பாண்டியன் அரண்மனைக்கு நூலிட்டனர் என்றும் தெளியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.