குணமாலை தன் தோழியுடன் பல்லக்கு ஏறி வீதி வழியே சென்று கொண்டிருந்தபோது, அசனிவேகம் என்னும் பெயருள்ள யானை மதங்கொண்டு பாகர்க்கு அடங்காமல் வீதி வழியே ஓடி வந்தது. குணமாலையின் பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்கள் மதயானைக்கு அஞ்சி, சிவிகையைக் கீழே வைத்துவிட்டு உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். யானை குணமாலைக்கு அருகில் வந்துவிட்டது. தப்பி ஓட முடியாமல் அவள் அஞ்சி நடுங்கினாள். அப்போது தோழர்களோடு அவ்வழியே வந்த சீவகன், குணமாலையின் ஆபத்தைக் கண்டு, யானைப் போரில் பழகியவன் ஆதலின், திடுமென ஓடி, சிங்கம் போல் கர்ச்சித்து, யானையின் முன்பு பாய்ந்து, அதன் மதத்தை அடக்கினான். குணமாலை அச்சத்தால் மெய் நடுங்கி நின்றாள்.
அப்போது அவன் தற்செயலாக அவள் முகத்தை நோக்கினான். அவளுடைய அழகான முகத்தில் அச்சம் என்னும் மெய்ப்பாடு அமைந்திருந்ததைக் கண்டான். ஓவியக்கலையில் வல்லவனான சீவகன், தனது வீட்டில் அமர்ந்து குணமாலையின் அச்சம் தோய்ந்த முகத்தை சித்திரமாகத் தீட்டினான். இதனை,
கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன்
தீட்டினான் கிழிமிசைத் திலக வாள்நுதல்
வேட்டமால் களிற்றின்முன் வெருவி நின்றதோர்
நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே! (சீவக:155)
என்று திருத்தக்கத் தேவர் குறிப்பிடுகிறார்.
அப்பொழுது சீவகனின் முதல் மனைவி காந்தருவதத்தை அங்கு வருகிறாள். அவன் அழகான மற்றொரு பெண்ணின் ஓவியத்தை வரைவது கண்டு ஊடல் கொள்கிறாள். அதற்குச் சீவகன் "அது ஓர் இயக்கி (தேவமகள்)யினுடைய உருவம்' என்கிறான். "உண்மைதான் உங்களுடைய உள்ளத்தை இயக்குவதால் இயக்கிதான்' என்று மேலும் ஊடுகிறாள்.
இதுவென உருவென இயக்கி யென்றலும்
புதிதிது பூந்துகில் குழல்கள் சோர்தலால்
மதுவிரி கோதையின் மாலை நின்மனம்
அதுமுறை யியக்கலின் இயக்கி யாகுமே! (சீவக:1015)
என்று ஒரு பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக்கி ஊடல் கொள்வதில் பெண்கள் திறமைசாலிகள் என்பதைத் திருத்தக்கதேவர் பதிவு
செய்துள்ளார்.
-முனைவர் க.மோகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.