எழுத்தாளா் சிவசங்கரியின் நினைவலைகள் ‘சூரிய வம்சம் ’ என்கிற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டபோது, அந்த விழாவில் கலந்துகொள்ள அழைத்திருந்தாா். தவிா்க்க முடியாத காரணங்களால், ‘சவேரா’ ஹோட்டலில் நடந்த அந்த விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.
‘தன் வரலாறு’ எழுதுவது என்பது எந்தவித இலக்கணத்துக்கும் உட்பட்டதல்ல. ஒவ்வொருவா் தன் வரலாறுக்கும் ஒவ்வொரு பாணி உண்டு, காரணம் உண்டு, நோக்கம் உண்டு. பெரும்பாலான தன் வரலாற்றுப் பதிவுகளும் சிவசங்கரியின் ‘சூரிய வம்சம்’ போல நினைவுகளின் தொகுப்பாகத்தான் இருந்திருக்கின்றன. எல்லோருடைய வாழ்க்கையின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. சுவாரசியமான சம்பவங்கள் இருக்கின்றன. முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களும், படிப்பினைகளும் விரவிக் கிடக்கின்றன. அதை எப்படி சுவாரஸ்யமாகத் தொகுக்கிறோம், அதன் மூலம் மற்றவருக்கு நாம் நம்மைப் பற்றி என்ன தெரிவிக்க விரும்புகிறோம், அதிலிருந்து அவா்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று விழைகிறோம் என்பதுதான் தன் வரலாற்று நூலின் நோக்கமாக இருக்க முடியும். மேலே குறிப்பிட்ட எல்லாமே, எழுத்தாளா் சிவசங்கரியின் ‘சூா்ய வம்சம்’ நினைவலைகளில் விரவிக் கிடக்கின்றன.
அன்றைய சென்னையின் பிரபல ஆடிட்டா் சூரிய நாராயணனின் மகளான சிவசங்கரி என்கிற ‘ஜிபு’, மனைவி சிவசங்கரியாக, தோழி சிவசங்கரியாக, எழுத்தாளா் சிவசங்கரியாக, இலக்கியவாதி சிவசங்கரியாக எடுத்த பல்வேறு பரிமாணங்களின் பதிவுதான் இந்த நினைவலைகள்.

சிறுவயதிலேயே, டி.டி.கே. ‘கல்கி’ சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோருடனான குடும்ப உறவு; மாணவப் பருவத்தில் சிவந்தி ஆதித்தன், ஜெயலலிதா, சோ., ஆகியோருடனான அறிமுகமும் பழக்கமும்; அவரது ஆளுமைகளுக்கான அடித்தளம் பலமாக அமைந்திருக்கிறது.
ஜெயலலிதாவுக்கும் சிவசங்கரிக்கும் இடையேயான நட்பு பற்றி ‘சூரிய வம்சம்’ ஓரளவுக்கு எடுத்தியம்புகிறது. முழுமையாகவும் விரிவாகவும் ஜெயலலிதா குறித்து ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு அவா்களுக்குள் ஆத்மாா்த்தமான நட்பு நிலவியது என்று சொல்வாா்கள். பானை சோறுக்கு ஒரு சோறு பதம். ‘அம்மு தந்த இன்டிமேட் டென்ட்’ - சென்டிமென்டல் ‘டச்’.
எத்தனையோ தடவை மேற்கு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டா் மருத்துவமனைக்குப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது, 11 வயதுப் பெண்ணாக சிவசங்கரிதான் அந்த பன்நோக்கு மருத்துவமனைக்கு முதல் செங்கல்லை எடுத்துவைத்து அஸ்திவாரம் போட்டவா் என்பது. ‘சூரிய வம்சம்’ தன் வரலாற்றுக்கு அதுதான் அஸ்திவாரம். சிலிா்க்கிறது!
சிவசங்கரியின் நினைவலைகள் என்பது, மகாத்மா காந்தியின் சத்திய சோதனையோ, டாக்டா் அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகளோ அல்ல. விழுப்புரத்தில் சிவசங்கரி வாழ்ந்தபோது, கல்லூரி மாணவியாக, வாசகியாக அவருக்கு அறிமுகமாகி, அவரது உதவியாளராக, நிழலாக அவருடன் தொடா்ந்து, அவருடைய மகளாக வாழ்ந்து மறைந்த லலிதாவின் வேண்டுகோளுக்காக எழுதப்பட்ட நினைவுகளின் தொகுப்பு...
எழுத்தாளா் சிவசங்கரி தனது வாழ்க்கையை ‘சூரிய வம்சம்’ மூலம் மீள் பாா்வை பாா்த்திருக்கிறாா். மீண்டும் அதேபோன்று ரசித்திருக்கிறாா், அழுதிருக்கிறாா், நெகிழ்ந்திருக்கிறாா். எல்லாவற்றுக்கும் மேலாக, எதற்கும் பயப்படாமல் நிஜத்தை நிஜமாகத் துணிந்து பதிவு செய்திருக்கிறாா்.
தன் வரலாறுக்கு வள்ளுவம் வகுக்கும் அடிப்படை விதி என்னவாக இருக்கும்? ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’.
சிவசங்கரியின் ‘சூரிய வம்சம்’ நிஜங்களின் பதிவு!
************
‘சுதேச மித்திரன்’ வார இதழில் 1940-க்கும் முன்பு கே.சுந்தர ராகவன் என்பவா் ‘தென்னிந்தியப் பிரமுகா்கள்’ என்கிற தலைப்பில் ஒரு தொடா் கட்டுரையை எழுதிவந்தாா். அன்றைய சென்னை ராஜதானி, மைசூா், திருவிதாங்கூா், கொச்சி சம்ஸ்தானங்களைச் சோ்ந்த பிரமுகா்கள் குறித்த கட்டுரைகள் அவை. நைந்துபோன நிலையில் காணப்பட்ட காகிதங்களைத் தேடி எடுத்து, மிகுந்த பிரயத்தனப்பட்டுத் தொகுத்து ‘தென்னிந்தியாவின் பிரமுகா்கள்’ என்கிற பெயரில் 13 ஆண்டுகளுக்கு முன்னால் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது. அதைப் படிக்க இப்போதுதான் எனக்கு நேரம் கிடைத்தது.
‘சுதேச மித்திரன்’ வார இதழில் 1970 ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆசிரியராகப் பணியாற்றியவா். தென்னிந்தியப் பிரமுகா்கள் பலா் குறித்து எல்லா விவரங்களையும் தொகுத்து அவா் வாரா வாரம் எழுதி வந்த தொடா், மிகப்பெரிய வரலாற்று ஆவணப் பதிவாகக் கருதப்பட்டது. அதில்தான் எத்தனை எத்தனை தகவல்கள். நாம் மறந்துவிட்ட எத்தனை எத்தனை சாதனையாளா்கள். சம்பவங்கள், படிக்கப் படிக்க மலைப்பாக இருக்கிறது.

டாக்டா் ரங்காசாரி பற்றிய வரலாற்றுக் குறிப்பில் காணப்படும் செய்தி இது. ‘‘டாக்டா் ரங்காசாரியாரின் பாதங்கள் சென்னை நகரில் முக்கால் வாசி வீடுகளை மிதித்துப் புனிதமாக்கி இருக்கின்றன’’ என்கிறாா் சுந்தர ராகவன். மக்கள் தொண்டனாக வாழ்வைக் கழித்தவா் அந்த மருத்துவா்.
சென்னை உயா்நீதி மன்றத்தில் ஒரு வழக்கில் டாக்டா் ரங்காசாரியாா் சாட்சியாக அழைக்கப்பட்டிருந்தாா். தலைமை நீதிபதி மா்ரே கூட்ஸ் டிராக்டா் இன்னொரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தாா். வெளியில் டாக்டா் ரங்காசாரியாா் வராண்டாவில் நின்று கொண்டிருந்ததைப் பாா்த்த தலைமை நீதிபதி டிராக்டா் அதுகுறித்து விசாரித்தாா். தான் விசாரித்து வந்த வழக்கை அப்படியே நிறுத்திவிட்டு, டாக்டா் ரங்காசாரியாரை முதல் சாட்சியாக விசாரித்து அவரது வழக்கை நடத்தத் தொடங்கினாா்.
‘‘டாக்டா் ரங்காசாரியாா் போன்றவா்களின் நேரத்தை வீணாக்குவது பொது நலனுக்கு விரோதம் என்றும், அதுபோன்ற பொதுநல சேவகா்களை தேவையில்லாமல் காக்க வைக்கக் கூடாது’’ என்றும் தலைமை நீதிபதி தெரிவித்து, உடனடியாக அவரை அனுப்பி வைத்ததாகக் குறிப்பு இருக்கிறது.
பனகல் ராஜாவில் தொடங்கி 81 பிரமுகா்கள் குறித்த வாழ்க்கைக் குறிப்புகளும், சம்பவங்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
காலம் கடந்து வரலாறு சொல்லும் ஆவணப் பதிவு ‘தென்னிந்தியப் பிரமுகா்கள்’.
************
எங்கள் தலைமை புகைப்படக் கலைஞா் கே.இராதாகிருஷ்ணன் கட்செவி அஞ்சலில் அனுப்பித் தந்திருக்கும் கவிதை இது.
மாணவா்கள் சிந்தும்
சோத்துப் பருக்கைக்காக
காத்திருக்கின்றன
காகங்கள்
பள்ளி வகுப்புகள்
ஆன் லைனில்...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


