ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிந்தனைக்கு அரிய சொற்றொடர்!

"செந்தமிழ் நாடு' என்னும் தலைப்பில் மகாகவி பாரதியார் பாடிய நான்கு வரிப் பாடல் தமிழர்களின் சிந்தனைக்கு அரிய விருந்தாகும். 

News image
Updated On :25 அக்டோபர் 2020, 11:46 am

சிற்பி பாலசுப்பிரமணியம்

"செந்தமிழ் நாடு' என்னும் தலைப்பில் மகாகவி பாரதியார் பாடிய நான்கு வரிப் பாடல் தமிழர்களின் சிந்தனைக்கு அரிய விருந்தாகும்.
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி-என மேவிய யாறுபல வோடத் - திருமேனி செழித்த தமிழ்நாடு!
இப்பாடல் வரிகளில் தமிழ் நாட்டில் பாயும் ஆறுகளைத் தமிழ் நாட்டின் மையப் பகுதியிலிருந்து வடக்குத் திசையில் பாய்கின்ற ஆறுகளை வரிசைப்படுத்திச் சொல்லி விடுகிறார். முதலில் காவிரி பின்னர் சற்றுப் பல மைல் தூரம் வடக்கில் பாயும் தென் பெண்ணை, தென்பெண்ணைக்குச் சற்று வடக்கில் தொண்டை மண்டலத்தில் பாயும் பாலாறு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.
காவிரி, தென்பெண்ணை, பாலாறு இவை மூன்றும் தமிழ் நாட்டின் வளத்துக்குக் காரணமான ஆறுகள். அந்த நதிகள் பாய்ந்து வளப்படுத்துகின்றனவேயன்றி அவற்றுக்கு வேறு சிறப்புகள் ஏதுமில்லை. அதனால் அடைமொழிகளாக பாரதியாரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
மேலும், தமிழ் நாட்டின் மையப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் நதிகளை அடுத்தடுத்துச் சொல்ல வேண்டும். தெற்கில் குறிப்பிட்டுச் சொல்ல வையை, பொருநை ஆகிய இரு நதிகளே உள்ளன. அந்த ஆறுகளின் பெயரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லி, பாடலை நிறைவு செய்ய மகாகவி பாரதி விரும்பமில்லை.
முதலில் வையை நதியைக் குறிப்பிட வேண்டும். அது வெறும் ஆறு மட்டுமன்று; மூன்று தமிழ்ச் சங்கம் கண்ட வையை ஆறு அது. இந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் கண்ணுதற் பெருங்கடவுளும், முருகப் பெருமானும், பாண்டிய மன்னர்களும், அகத்தியரும் மற்றும் புலவர்கள் பலரும் இருந்து காலம் காலமாகத் தமிழ் வளர்த்ததை வையை ஆறு கண்டும் கேட்டும் மதுரை நகர் வழியே காலம் காலமாக ஓடிக்கொண்டிருக்கிறதே... தமிழைக் குடித்துக் குடித்து தமிழ் வளம் கண்டதாயிற்றே இந்த வையை! அதற்குத் தெற்கே ஓடும் பொருநை குறுமுனி அகத்தியர் குடியிருந்து தமிழ் வளர்த்த பொதிகை மலையில் அல்லவா தோன்றியது... அதுவும் குறுமுனிவனின் தமிழைக் கண்டதாயிற்றே... கேட்டதாயிற்றே...
அதனால்தான் "தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி' என்று அவற்றுக்கு அடைமொழி கொடுத்து தமிழுக்கும் இவ்விரு நதிகளுக்கும் சிறப்பு செய்து மகாகவி பாரதி பாடலை முடிக்கிறார். மகாகவி பாரதி பாடல்களின் தனிச்சிறப்பு இதுதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.