ஆசைதான் பிறவிக்கான விதை. ஆசை வயப்படுவதால்தான் தொடர்ந்து "பிறவிப் பெருங்கடலில்' நாம் தத்தளித்துக்கொண்டே இருக்கின்றோம்.
"அவா என்ப எல்லாஉயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பினும் வித்து' (குறள்)
"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்'
என்று பாடுகின்ற அருணகிரிநாதர்,
இவர்போய் அவராய் அவர்போய் இவராய்
இதுவே தொடர்பாய் வெறிபோல
ஒருதாய் இருதாய் பலகோடியதாய்
உடனே அவமாய் அழியாதே!
என்றும், பிறவிகள் பல காண்பதால் நமக்கு அன்னையர்களும் அதிகம் என்பதைப் புரிய வைக்கிறார். பட்டினத்தாரும் "அன்னை எத்தனை எத்தனையோ? அப்பன் எத்தனை எத்தனையோ? இன்னும் எத்தனை எத்தனை ஜென்மமோ?' என்கிறார்.
குருநமசிவாயர் இக்கருத்தை அதி அற்புதமாக விளக்கிக் கூறுகின்றார். "நான் பல பிறவிகள் கண்டுள்ளேன். ஒவ்வொரு பிறப்பிலும் எனக்கு வாய்த்த அன்னையர்களிடம் பால் பருகியுள்ளேன். அவ்வாறு நான் பருகிய தாய்ப்பாலை ஒருங்கு கூட்டினால் திருமால் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடல்கூட சிறியதாகிவிடும்'.
எடுத்த பிறப்பெல்லாம் எனக்குவந்த தாய்மார்
கொடுத்த முலைப்பால் அனைத்தும்கூட்டின் - அடுத்தவிறல்
பன்நாகத்து அணைதுயிலும் பால் ஆழியும் சிறிதாம்
மன்னா சிதம்பர தேவா!