நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்
ஓர்த்து இசைக்கும் பறை. (பாடல்- 195)
நேர்மையான வழியல்லாமல், குணமற்ற ஒன்றை ஒருவர் தம் உள்ளத்திலே கொண்டிருந்தால், அத்தகையவரை மீண்டும் அந்தத் தவறான எண்ணத்தினின்றும் தெளிவித்தல் பெரியவர்களுக்கும்கூட இயலாத ஒன்றாகும். கூர்மையான நுண்பொருளின் கேள்வியினால் அறிவு உடையவர்களுக்கே என்றாலும், அவர் எண்ணியதையே பறையானது ஒலிக்கும் என்பதை அறிக. பறை அவரவர் கருத்தை ஒட்டியே ஒலிப்பதுபோல மனமும் அவரவர் கொண்ட கருத்துப்படியே செல்லும். அதைப் பிறர் மாற்றுதல் எளிதன்று. "ஓர்த்து இசைக்கும் பறை' என்பது பழமொழி.