அங்கோல் அவிர்தொடி! ஆழியான் ஆயினும்
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்
வெங்கோன்மை வேந்தர்க்கண் வேண்டும் சிறிதெனினும்
தண்கோல் எடுக்குமாம் மெய். (பாடல்-248)
அழகிய ஒளிபடைத்த வளையல்களை அணிந்துள்ளவளே! சக்கரப்படையினை உடைய திருமாலே ஆயினும் அவனும் செங்கோன்மையாளனாக அல்லாத இடத்து, அவனைச் சேர்ந்தவர்களும் அவனை மதிக்க மாட்டார்கள், இகழ்ச்சியாகவே பேசுவர். கொடுங்கோன்மை உடைய தன்மையும் சிறிதளவே ஆயினும் வேந்தர்கள்பால் இருக்கத்தான் வேண்டும். ஆயினும், அருளோடு செலுத்தும் தன்மையான பண்பே உண்மையாக அவர்களை உயர்த்தும் என்பதை அவர்கள் மறந்துவிடவும் கூடாது. "தண்கோல் எடுக்குமாம் மெய்' என்பது பழமொழி (தண்கோல்- அருளாட்சி).