நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல்-புல்லார்
புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள்வில் லேற்றி
இடைக்கலத்து எய்து விடல். (பாடல்-249)
நல்ல கல்வியறிவு உடையவர்கள் கூடியிருக்கிற அவையைக் கண்டால் தம் நாவைச் கழட்டி வைத்துக்கொண்டு, நன்மையானவற்றை உணராத புல்லர்களின் கூட்டத்திலே தம்மைப் புகழ்ந்து பேசிக் கொள்ளுதல், பகைவரிடத்திலே உள்ள வீரத் தன்மைக்குப் பயந்த ஒருவன், தன் வீட்டின் உள்ளேயே இருந்துகொண்டு, தன் வில்லை வளைத்து நாணேற்றி எதிர்ப்பட்ட பானை சட்டிகளிலே எய்து, தன் போர்த் திறமையைக் காட்டுவது போன்றதாகும். "இல்லுள் வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்' என்பது பழமொழி.