மகாகவி பாரதியாரின் முதற்பாடலாகக் கொள்ளப்பட்ட பாடல் "எட்டயபுர மன்னருக்கு விண்ணப்பம்' என்பதாகும். இப்பாடல் எழுதப்பட்ட காலம்: 2411897.
காலத்தால் முற்பட்ட இப்பாடலை முதல் முதலாகக் கண்டறிந்து, 1974 ஆகஸ்ட் மாத "கலைமகள்' மாத இதழில் வெளியிட்டவர் பாரதியின் இளவலான சி. விசுவநாத ஐயர் ஆவார்.
பாரதியார் திருநெல்வேலி இந்துக் கல்லூரியைச் சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம் (பத்தாம் வகுப்பு) படித்துக்கொண்டிருந்தபோது, தம்முடைய 15ஆம் வயதளவில், தம் படிப்புச் செலவுக்கு உதவி செய்யக்கோரி எட்டயபுர மன்னருக்கு எழுதிய செய்யுள் வடிவிலான கடிதம் இதுவாகும்.
பாடலின் ஆரம்பத்திலேயே, "தென்னிளசை நன்னகரிற் சிங்கம் வெங்கடேசுரெட்ட கண்ணன் சுமுக சமூகம்' என்றுதான் பாரதி குறிப்பிடுகின்றார்.
பாரதியின் பாடலை வெளியிட்ட நிலையில், சி. விசுவநாத ஐயர் எழுதிய குறிப்பு கருதத்தக்கது.
"சி. சுப்பிரமணிய பாரதி என்று நூலின் ஆரம்பத்திலோ இறுதியிலோ எழுதியவர் இதில் "இளசை சுப்பிரமணியன், எட்டயபுரம்' என்றே கையொப்பமிட்டுப் பாடலை முடித்திருக்கிறார்' என்று பாரதியின் இளவல் எழுதியுள்ள குறிப்பால், ஆரம்பகால நிலையில் "இளசை சுப்பிரமணியன்' என்றே கையொப்பம் இட்டுள்ளார் பாரதி என்பது தெரிய வருகிறது.
("கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' முதல் தொகுதி: பக்கம் - 7)