சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

கம்பனின் தமிழமுதம் - 7: கண்ணீரும் கம்பலையும்!

பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களை, காப்பியத்தில் ஆங்காங்கே பயன்படுத்துகிறான் கம்பன்.

News image

கம்பர்

Updated On :25 ஆகஸ்ட் 2024, 6:22 pm IST

பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களை, காப்பியத்தில் ஆங்காங்கே பயன்படுத்துகிறான் கம்பன். உதாரணத்துக்கு, "கம்பலை' என்னும் சொல். சோகம் தாக்கிய ஒருவன் அழுது புலம்பிக் கொண்டிருப்பதைக் குறிக்க, "அவன் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறான்..' என்று சொல்கிறோம். "கண்ணீர்' என்றால் தெரிகிறது; "கம்பலை' என்றால் என்ன?

தமிழின் சிறப்பு, பொருள் இல்லாத சொல் ஒன்றுமில்லை என்பதுதான். அதனால்தான், "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்கிறது தொல்காப்பியம்.

கம்பலை என்பதற்கு "அரற்றுதல்' என்று விளக்கம் தருகிறது தமிழ் அகராதி. பொருள் இல்லாத பேச்சு ஓசை. "கம்பலை' என்னும் சொல்லை, மிகப் பொருத்தமான ஓர் இடத்தில் வைத்திருக்கிறான் கம்பன்.

சீதையைப் பிரிந்த பின் இராம இலக்குவர்கள், கிட்கிந்தை நோக்கி வருகிறார்கள். அனுமனின் அணுக்கம் கிடைக்கிறது; சுக்ரீவனின் நட்பு கிடைக்கிறது. வாலி கொல்லப்பட்ட பின்னர், சுக்ரீவனுக்குப் பட்டமும் கட்டியாயிற்று. சீதையைத் தேட ஆட்களை அனுப்புவதே அடுத்த வேலை. சரியாக, மழைக்காலம் குறுக்கிட்டுவிட்டது.

'மழைக்காலம் முடிந்தவுடன், படைகளைத் திரட்டிக்கொண்டு வா. அடுத்த பணிகளைத் திட்டமிட்டு செயல்படலாம்'' என்று சுக்ரீவன், அனுமன், அங்கதன் என அனைவரையும் நாட்டுக்கு அனுப்பிவிட்டான் இராமன்.

தங்களுடன் வந்து அரண்மனையிலேயே தங்கிக் கொள்ளலாம் என்னும் சுக்ரீவனின் அழைப்பை நிராகரித்துவிட்டு, காட்டிலேயே இருக்கிறார்கள் இராமனும் இலக்குவனும்.

மழைக்காலம் முடிவுக்கு வருகிறது. மேகங்கள் வெளுத்து உலவுகின்றன. இடியும் மின்னலும் இல்லாமல் போகின்றன... மழைக்கால இருள் மறைந்து, இரவில் நிலவின் ஒளி வீசத் தொடங்குகிறது. பகலில் பறவைகள் பறக்கத் தொடங்குகின்றன. இப்படி பற்பல காட்சிகளைச் சொல்லும் கம்பன், "மழைக்காலத்தில் ஓயாமல் ஒலி ஏற்படுத்திக் கொண்டிருந்த தவளைகள், இப்போது அமைதியாகிவிட்டன' என்கிறான். அதற்கு அவன் சொல்லும் உவமையும், அந்த உவமையில் பயன்படுத்தும் சொல்லும், அவ்வளவு அழகு.

தொடக்க வகுப்புகளில் குழந்தைகள் பேசிக்கொள்ளும் ஓசையைக் கேட்டிருப்பீர்கள். நிறுத்தாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். சப்தம் அதிகமாகவே கேட்கும்.

அவர்களோ, படிப்பை முடித்து உயர்ந்த வேலைகளில் அமர்ந்திருக்கும்போது, "இவர் என்ன சொல்லப் போகிறார்?' என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் நாட்களில், பேச்சினைக் குறைத்து, அமைதியாகத் தமது வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.

மழைக்காலங்களில் தவளைகளின் ஓசை அதிகமாக இருந்து, மழைக்காலம் முடிந்த பின்னர் அவை அமைதியாகிவிடுவதற்கு, மனிதர்கள் பள்ளிப் பருவத்தில் பேசிக்கொண்டே இருந்து, பக்குவம் அடைந்த நிலையில் பேச்சினை மிகவும் குறைத்துக் கொள்வதை உதாரணமாகச் சொல்கிறான் கம்பன். பாடல் இதுதான்:

கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்

பல்விதச் சிறார் எனப் பகர்வ பல் அரி,

செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா

நல்லறிவாளரின் அவிந்த நா எலாம்.

இந்தப் பாடலின் முதல் வரியில் "கம்பலை' என்னும் சொல் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.

ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் பெரும்சப்தமிட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியுமா என்ன?

மாணவர்கள் வகுப்புகளில் பேசிக்கொள்ளும், பொருள் புரிந்துகொள்ள முடியாத பேச்சு ஒலியைக் குறிப்பதற்கு "கம்பலை' என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான் கம்பன்.

கம்பலை என்னும் சொல்லுக்கான பொருள் இப்போது நமக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டதல்லவா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.