மாலவனுக்கு சேவை செய்து பெருமைப்பட்ட அடியார்களில் ஒருவர் திருக்கச்சிநம்பிகள் என்னும் ஆசாரியர். காஞ்சி வரதராஜப் பெருமானுக்கு ஆலவட்டம் (விசிறி) வீசும் கைங்கர்யம் செய்து, அந்தப் பெருமானுடனே உரையாடும் அளவிற்கு பக்தியின் உயர்ந்த நிலையில் திகழ்ந்தவர்.
இவருடைய அவதார ஸ்தலமாகிய பூவிருந்தவல்லியில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் (பேருந்து நிலையம் அருகில் உள்ளது) இவரது சந்நிதியும் மற்றும் இவருக்குக் காட்சியளித்த திருவரங்கன், திருமலையப்பன், காஞ்சி வரதன் சந்நிதிகளும் உள்ளன.
இவ்வாலயத்தில் தற்போது திருக்கச்சி நம்பிகள் திருஅவதார உற்ஸவம் நடைபெற்று வருகிறது. மார்ச் 9ஆம் தேதி (மாசி, நவமி, மிருகசீர்ஷம்) இவருடைய அவதார தினத்தன்று காலை 6 மணிக்கு திருமஞ்சனம், திருக்கைத்தல சேவை, திருப்பாவை சாற்று முறையும், தொடர்ந்து தங்கப் பல்லக்கில் பவனியும், இரவு பெரியமங்களகிரி வாகனத்தில் சேவையும் நடைபெறுகிறது. வைணவ சீலருக்கு நடைபெறும் இந்த வைபவத்தில் பங்கேற்பது நாம் செய்யும் பாக்கியமே!