மனக்குறைகளைப் போக்கும் திருநிலை ஸ்ரீ பெரியாண்டவர்!

தொண்டை நாட்டில் வழிபாடு சிறப்புமிகுந்த கோயில்களில் ஒன்று, திருநிலை ஸ்ரீ பெரியாண்டவர்
Updated on
2 min read

தொண்டை நாட்டில் வழிபாடு சிறப்புமிகுந்த கோயில்களில் ஒன்று, திருநிலை ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோயில்! திருக்கழுகுன்றத்திலிருந்து ஒரகடம் செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இவ்வாலயம்.

திருநிலை கிராமத்தில் ஏரிக்கரையோரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இக்கோயிலின் மூலவர், பெரியாண்டவர் என்றழைக்கப்படும் சிவபெருமான் ஆவார்!

வடக்கு நோக்கிய ஆலயம், மூன்று நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்தை உடையது. நுழைவாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலப்புறம் மயில்மீது அமர்ந்த நிலையில் ஆறுமுகனும் அருள்புரிகின்றனர்.

நுழைவாயிலை அடுத்து உள்ள 16 கால் மண்டபத்தில், நின்ற நிலையில் காட்சிதரும், "விபூதி விநாயகர்' திருமேனிக்கு விபூதியால் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட விபூதி, பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

கருவறையில் இறைவன் சுயம்புலிங்கத் திருமேனியாக காட்சித் தருகிறார். இறைவனுக்கு எதிரில் நின்றகோலத்தில் மனித வடிவில் நந்திபெருமான் காணப்படுகிறார். கருவறையின் மீது கூரை வேயப்படாமல் வெட்ட வெளியாக காணப்படுகிறது. இதற்கு ஒரு வரலாறும் கூறப்படுகிறது.

வெகுகாலத்திற்கு முன்பு வறுமையில் வாடிய ஒரு தம்பதியர், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரரை வேண்டுகின்றனர். இறைவன் அருளால் அங்கு தோன்றிய வராகத்தைத் தொடர்ந்து செல்கின்றனர்.

அப்படி அவர்கள் திருநிலை கிராமத்தை அடைந்த போது,வெட்டவெளியில் ஜோதியாகத் தோன்றிய இறைவனை அவர்கள் பெரியாண்டவராக வழிபட்டனர். எனவே இக்கோயிலில் கருவறைக்கு மேலே கூரையில்லை.

கருவறையில் இறைவனை வலம் வரும்போது, சிவபெருமான்-பார்வதி தேவி, அங்காளபரமேஸ்வரி சுதைச் சிற்பங்களைக் காணலாம். மேலும், தட்சிணாமூர்த்தி, பைரவர், அர்த்தநாரீஸ்வரர் அருளையும் பெறலாம். கருவறை சுற்றுச் சுவரில் 21 சிவ கணங்களின் வடிவங்களும் காட்சி தருவது சிறப்பாகும்.

சுயம்புலிங்க வடிவமாகக் காட்சி தரும் இறைவனின் இடப்புறமும், வலப்புறமும் இறைவன் சிவபெருமான் மற்றும் சக்தி பார்வதி தேவியின் பாதங்களும் சிறப்பாக வழிபடப் பெறுகின்றன. அருகிலேயே ஆலயத்தின் தலமரமான வில்வமரமும் அமைந்துள்ளது. பெரியாண்டவரை பக்தர்களே கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

ஆலயச்சிறப்பு: சக்தியாகிய பார்வதி தேவியின் பாதம் பதித்த தலம் இது! இறைவனை ஆட்கொள்ள தேவி அங்காள பரமேஸ்வரியாக தோன்றிய சிறப்புடைய தலம் இது என தலப்புராணம் தெரிவிக்கிறது.

தேவியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்தபோது 21 மண் உருண்டைகள் சிதறிவிழுந்து சிவகணங்களாக உயிர்பெற்ற தலச்சிறப்புடையது. மண் உருண்டைகளாக உயிர்த்தெழுந்த சிவகணங்கள் சுயம்பு லிங்கமான இறைவனைச் சுற்றிலும் அமர்ந்து வழிபட்டனர்.

மண்ணில் இருந்து சிவகணங்கள் தோன்றியதுபோல், நம் கைகளால் ஏழு மண் உருண்டைகள் செய்து, சுயம்பு லிங்கத்திற்கு எதிரே வைத்து, சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்கரித்து, கற்பூர ஆராதனை காட்டினால், நம் தீவினைகள் அகன்று நோய்கள் நீங்கி வளமோடு வாழலாம். ஞாயிறுதோறும் மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குழந்தைப்பேறு வேண்டிவரும் பக்தர்கள், இங்கு சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். ஸ்ரீபெரியாண்டவர் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறார்.

தொடர்புக்கு: 98427 40957 / 97511 75349.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com