முண்டகக் கண்ணியம்மன்!

சென்னை மாநகரில் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சற்று தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் ஆலயம். இங்கு எப்போதும் கூட்டத்திற்கு குறைவிருக்காது.
முண்டகக் கண்ணியம்மன்!
Updated on
1 min read

சென்னை மாநகரில் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சற்று தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் ஆலயம். இங்கு எப்போதும் கூட்டத்திற்கு குறைவிருக்காது. அதேபோன்று, பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம், தயிர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், தேன் அபிஷேகம் என எப்போதும் பக்தர்களால் நடத்தப்படும் அபிஷேகங்களுக்கும் குறைவிருக்காது. 
கோயிலின் உள்ளே நுழைந்ததும் இடது புறம் நாகர் சந்நிதி உள்ளது. இங்கே உள்ள ஏராளமான நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பாலபிஷேகம் போன்றவற்றைச் செய்து வழிபடுகிறார்கள். இதனால் நாகதோஷம் விலகுவதாக நம்புகின்றனர். 
கோயிலின் வடபுறம் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகள் வீற்றிருக்கிறார்கள். வடமேற்கு மூலையில் ஜோதி விநாயகர் காட்சி தருகிறார். 
ஆலயத்தின் கருவறை சற்று வித்தியாசமானது. இங்கு சுயம்புவாக, அருவுருவமாக அம்மன் வீற்றிருக்கிறார். சிவலிங்கம் போன்ற நீண்ட திருக்கல்லின் கீழ் பாகத்தில் திரிசூலம் ஒன்று பொறிக்கப்பட்டிருக்கிறது. மேல் பாகம் தாமரை மலரைப் போன்று உள்ளது. அந்த தாமரை மலரிலேயே வெள்ளியில் செய்யப்பெற்ற பளபளக்கும் கண்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன, அதுதான் அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன்!
இவ்வாலய கருவறை, மற்ற கோயில்களைப் போன்று பிரமாண்டமான சிற்ப வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்டதில்லை. சற்று வியப்பு ஏற்படுத்தும் வகையில் தென்னங்கீற்றுகளால் ஆன, கூரைகள் வேயப்பட்டிருக்கிறது. அதனால்தான் கருவறை கூரையால் வேயப்பட்டிருக்கிறது.
தாமரை மலர் மஹாலட்சுமி வாசம் செய்யும் மலர். அந்த தாமரை மலரையே கண் மலராகப் பெற்றிருக்கிறார் அம்மை முண்டகக் கண்ணியம்மன். இவ்வம்மனை வணங்குவதால் மஹாலட்சுமியின் அருளும் சேர்ந்து கிடைக்கும் என்பது ஜதீகம்! கர்ப்பகிரகத்தினை அடுத்து, உற்சவர் சந்நிதி அமைந்திருக்கிறது. 
நாகர் சிலைகளுக்கு அருகேயுள்ள அரசமரத்தில் திருமணம், குழந்தைப்பேறு வேண்டுவோர் தாலி சரடு, தொட்டில் போன்றவற்றை கட்டி பிரார்த்திக்கின்றனர். மேலும் கடன் தொல்லை, கணவன்- மனைவி பிரச்னை, வீடு கட்டுதல், உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்கும் அம்மனிடம் வேண்டுதல் வைக்கின்றனர். 
இவ்வாலயத்தின் அதிசயம், தலவிருட்சம்! அது, ஓர் இலை கூட இல்லாத குரு ஆலமரம் என்ற தலமரம். இம்மரத்தின் அடியில் புற்றும் அமைந்துள்ளது. 
அம்மனை குளிர்ச்சிப் படுத்துவதால் அம்மை, கண்நோய் போன்ற வெப்ப நோய்களை இவ்வம்மன் குணப்படுத்துவாள். அதனால்தான் அம்மனுக்கு எப்போதும் குளிர்ச்சியான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது என்கின்றனர்.
ஆடிப்பூரம், நவராத்திரி, சித்ரா பௌர்ணமி நாள்களில் இங்கு, 1008 பால்குடம் விழா போன்றவை சிறப்பாக நடத்தப்படுகிறது. அதிக அளவில் வெளிநாட்டினரும் வந்து வணங்கிச் செல்லும் ஆலயமாகத் திகழ்கிறது முண்டகக் கண்ணியம்மன் ஆலயம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com