பொன்மொழிகள்!

முற்பகலில் அறத்தைச் சம்பாதிக்க வேண்டும். பிற்பகலில் பொருளைச் சம்பாதிக்க வேண்டும். இரவை சாந்தி பெறுவதற்கு செலவிட வேண்டும். உரியதை உரிய காலத்தில் செய்தால் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும்.
பொன்மொழிகள்!
Updated on
1 min read


 முற்பகலில் அறத்தைச் சம்பாதிக்க வேண்டும். பிற்பகலில் பொருளைச் சம்பாதிக்க வேண்டும். இரவை சாந்தி பெறுவதற்கு செலவிட வேண்டும். உரியதை உரிய காலத்தில் செய்தால் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும்.
- ஸ்ரீராமபிரான்

நீதி நிபுணர்கள் நிந்திக்கட்டும் அல்லது துதிக்கட்டும்; செல்வத்திருமகள் இப்போதே வரட்டும் அல்லது அவள் எப்படி இஷ்டமோ அப்படிப் போகட்டும்; மரணம் இப்பொழுதே வரட்டும் அல்லது யுக முடிவில் வரட்டும் எது எப்படியிருந்தாலும் நியாய வழியிலிருந்து தீரர்கள் விலக மாட்டார்கள்.
- பர்த்ருஹரியின் நீதி சதகம்

அனைத்துலகுக்கும் ஆத்மாவாகவும் இயற்கையில் ஒன்றாகவும் மும்மூர்த்திகள் விளங்குகிறார்கள். இந்த மும்மூர்த்திகளிடையே எவன் வேற்றுமையைக் காண்பதில்லையோ அவனே சாந்தியை அடைவான்.        
- பாகவதம்

சீடர்கள் சத்குருவின் வாக்கியமாகிய வலிமையுள்ள தோணியில் உட்கார்ந்துகொள்கிறார்கள். அங்கு அவர்கள் அப்பியாசமும் பழவினைகளுமாகிய பலமான காற்றினால் உந்தப்படுகிறார்கள். அப்போது குருவாகிய தோணியோட்டுபவனால் இயக்கப்பட்டு, சம்சார சாகரத்தை அவர்கள் கடக்கிறார்கள்.    
- குருகீதை

கெளரி ஒருத்தியாக இருக்கிறாள், அவளே பலவித வடிவமுள்ள சக்திக் கூட்டங்களின் உருவம் எடுத்துக்கொள்கிறாள், அவள் உலகங்கள் எல்லாவற்றிலும் பரவி தன் இஷ்டப்படி விளையாடுகிறாள், அவள் மங்களத்தைக் கொடுப்பவள், வணங்குபவர்களுக்குக் கற்பகக்கொடியைப்போல் விருப்பங்களை நிறைவேற்றுபவள்  அத்தகைய தாமரை போன்ற கண்கள் உள்ள தாயான கெளரியை நான் துதிக்கிறேன்.
- கெளரி தசகம்

பிறப்பு துக்கம், முதுமை துக்கம், நோய் துக்கம், மரணம் துக்கம், சோகமும் துயரமும் துக்கம், கடுந்துன்பமும் கதியற்ற நிலையும் துக்கம், விரும்புவது கிடைக்காமல் போவது துக்கம், வேண்டாதது கிடைப்பது துக்கம், விரும்பிக் கிடைத்ததை இழப்பது துக்கம்.    
- புத்தர்

நதிகள் வெவ்வேறு இடங்களில் தோன்றி, வேறு வேறு வழிகளில் செல்கின்றன. என்றாலும் அவை இறுதியில் கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல், ஒருவன் பிராம்மண தர்மத்தை ஏற்றாலும் சூத்திர தர்மத்தை ஏற்றாலும் முறையாக வாழ்ந்து வருவானாகில், அவன் முடிவில் பரமாத்மாவையே அடைகிறான்.    
- கருட புராணம்

தவம் செய்வது என்பது வேதம் ஓதுவதாகும்.    -தைத்திரீய ஆரண்யகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com