

பகவானைச் சரணடைந்தவன் "பிரபன்னன்' என்று சொல்லப்படுகிறான். அவனுடைய தேகயாத்திரை (தேகத்தை நடத்திச் செல்வது) பழவினையின் பலனாக அமைகிறது; ஆகவே கவலைப்படாதே. நீ ஸ்ரீமந் நாராயணன் மீது பூரணமாக நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்.
-ஸ்ரீ ராமானுஜர்
ஆத்ம சாட்சாத்காரமே மனிதகுலத்திற்கு நாம் செய்யக்கூடிய சிறந்த உபகாரமாகும். காட்டின் நடுவில் இருந்தாலும், மகான்கள் நிரந்தரமாக எல்லோருக்கும் உதவியாக இருப்பார்கள்.
-ஸ்ரீ ரமண மகரிஷி
""கேசவனே! புருஷோத்தமனே! வராக அவதாரம் எடுத்தவனே!'' என்று பேசும் உத்தம பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடையும் பெருமையை நாம் சொல்லத் தொடங்கினால் அது நம்மால் முடியாது.
-ஸ்ரீ பெரியாழ்வார்,
பெரியாழ்வார் திருமொழி 4.5.1
பிராட்டியோடு பெருமான் சேர்ந்திருக்கிறார். அவரை நீங்கள் விழுந்துவிடும் இயல்புடைய இந்த உடல் உள்ள வரையில், அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும், யாகம் முதலிய நற்செயல்களாலும், வெறும் சடங்குகளாலும், வெறும் மந்திரங்களாலும் தொழுங்கள்.
(அவற்றைச் செய்வதற்கு சக்தி இல்லாவிட்டால்) உங்களுக்குச் சொல்லக் கூடிய சக்தி உள்ள வரையிலும் எம்பெருமானின் திருநாமங்களைக் கொண்டு புகழ்ந்தீர்களானால், அது உங்களுக்கு நல்லது.
-ஸ்ரீ பொய்கையாழ்வார்,
முதல் திருவந்தாதி70
புலித்தோலை அணிந்தவரும், நாகங்களை அணிகலன்களாகப் பெற்றவரும், பார்வதிதேவியின் கணவரும், மனதில் ஏற்படும் இறுமாப்பை ஒழிப்பவரும் ஆகிய பசுபதீசுவரரை நான் வணங்குகிறேன்
-கந்துகாபுர மாகாத்மியம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.