சகல எண்ணங்களையும் நிறைவேற்றும் ஊத்துமலை ஸ்ரீசக்ர கால பைரவர்!

ஊத்துமலையில் ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிறு குன்று கோயிலான இந்த சந்நிதி சேலம் மாநகரின் மாணிக்கமாக விளங்குகிறது.
சகல எண்ணங்களையும் நிறைவேற்றும் ஊத்துமலை ஸ்ரீசக்ர கால பைரவர்!
Updated on
1 min read

ஊத்துமலையில் ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிறு குன்று கோயிலான இந்த சந்நிதி சேலம் மாநகரின் மாணிக்கமாக விளங்குகிறது. அற்புத மூலிகைகளும், இயற்கை வளங்களும், மூலிகை சுனை தீர்த்தங்களும் ஆங்காங்கே ஊற்றுச் சுனைகளில் தண்ணீர் கசிந்த வண்ணம் இருப்பது தனிச்சிறப்பு. ஸ்ரீபாலமுருகனை மயூரப்பிரியா என்றும் அழைப்பர். மயில் வாகனத்துடன் இணைந்திருக்கும் மூலவர் திருமேனி முருக பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அகத்தியர், போகர், புலிப்பாணி, கபிலர், ரேணுகர், சுகர், லோபமுத்ர மாதாஜி முதலிய முனிவர்கள் வழிப்பட்ட திருத்தலம். 

முருகனின் திருக்கைவேல் ஞானவேல், சக்திவேல், வஜ்ரவேல், வீரவேல், சத்ரு சம்ஹாரவேல் முதலிய வேல்களில் யோகவேல் தனிச்சிறப்புடையது. முருகனையும் யோகவேலினையும் வணங்குவதால் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வு வாழலாம் என்பது அருணகிரிநாதரின் அருள்வாக்கு. 

முருகப் பெருமானையும், அம்பிகையையும், சித்தர்கள் வழிபட்டு ககண மார்க்கமாக செல்லும் யோக முறையை அறிந்து கொண்ட ஸ்தலம். இங்கு அகஸ்தியர் சிவபூஜைகளுக்காக ஏழு கண்களை உருவாக்கியுள்ளார். அதை "சப்த சாஹர தீர்த்தங்கள்' என்று அகஸ்தியர் மூல ஓலைச்சுவடி கூறுகின்றது. 

இந்த தீர்த்தங்கள் அனைத்தும் மூலிகை குணங்களைக் கொண்டது. இந்த தீர்த்தத்தில் நீராடவும், பருகவும் செய்தால், சருமநோய், மனநோய், சிறுநீரகநோய், இருதய நோய், குஷ்டரோகம், முன்வினைநோய், மூதாதையர் தோஷம் நீங்கி நன்மைகள் அடையலாம். இந்தக் குகையின் மிக அற்புதம் என்னவென்றால் தியானயோகம் தெரியாதவர்கள் கூட மிக எளிதில் தியானயோக சித்திகள் பெறவல்ல அற்புதம் நிறைந்த இடம். 

பிரதிமாதம் பெüர்ணமி தோறும் 18 சித்தர்கள் பூஜைகள் நடைபெறும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிவபார்வதியின் திருமணத்தைக் காண அனைவரும் இமயமலை சென்ற சமயம் வடபுறம் தாழ்ந்து, தென்புறம் ஓங்க இறைவனின் அருளாணைப்படி ஸ்ரீஅகஸ்தியர் பொதிகை மலைக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊத்துமலையின் ஆசிரமம் குகைக்கோயில் நிவர்த்தி அமைத்து ஸ்ரீசக்ரம்(சக்ராம்பிகை) பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்தலம். 

தேவி பக்தர்களாம் ஸ்ரீஅகத்தியரும் அவர்தம் மனைவி லோபாமுத்ராதேவியும், ஸ்ரீவித்யா பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீசக்ர மாத்ருக பூஜை செய்து இந்த ஸ்ரீசக்ரத்தை சர்வ ரோகஹரசக்ரமாக அமைத்து வழிபட்ட ஸ்தலம் இதுவே ஆகும். 

தேவி பக்தர்களுக்கும், ஸ்ரீவித்யா உபாசகர்களுக்கும் வரப்பிரசாதத்தை அள்ளி வழங்கும் திருக்கோலம். ஊத்துமலையில் உள்ள ஸ்ரீசக்ர காலபைரவர் திருமேனி தமிழக திருக்கோயில்களில் உள்ள பைரவர் திருமேனிகளில் மிகப்பெரியது என்று சொல்லப்படுகிறது. மேலும் தனம் தரும் பைரவர் எனவும் இவரைக் கூறுவார்கள். 

பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமி பூஜை மிகவும் பிரசித்தம். இந்த பைரவரை வேண்டினால் சகல எண்ணங்களையும் நிறைவேற்றுவார் என்பது ஜதீகம்.  

வழித்தடம்: சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் புறவழிச்சாலையில்  7 கி.மீ. தொலைவில் சீலநாயக்கன் பட்டியில் இறங்கி மலைக்கு நடந்து செல்ல வேண்டும்.    

தொடர்புக்கு: 9443245146 (திருஞானசம்பந்த ஈசான சிவாச்சாரியார்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com