படித்த ஓர் இளைஞன் வேலை தேடி நகரத்திற்குச் சென்றான். அவன் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. மிகவும் சோர்ந்து போய் விட்டான்.
அவனின் தாய் ஊரில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால், வெளியூருக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவதாக தன் தாயாரிடம் கூறி விட்டு வந்தது மனதில் ஓடியது. ஆனால், இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளதே என எண்ணி வருத்தமடைந்தான்.
என்ன செய்வது? அங்குள்ள கோயிலின் வாசல்படியில் அமர்ந்து, மீண்டும் ஊருக்கே போய் விடலாமா? என யோசிக்க ஆரம்பித்தான்.
அப்பொழுது ஒரு பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்தவர்கள் தங்களது மிதியடிகளை எங்கு கழற்றி வைப்பது என்று பார்த்தபோது, வாசலில் அமர்ந்திருந்த அந்த இளைஞரிடம் ""தம்பி! இந்த செருப்பை எல்லாம் பார்த்துக்கொள்!'' என்று கூறிவிட்டு, உள்ளே சென்றனர்.
அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "சரி... அவர்கள் வரும் வரை காத்திருந்து அவர்கள் மிதியடிகளை ஒப்படைத்து விட்டுச் செல்வோம்' என முடிவெடுத்தான்.
சற்றுநேரம் கழித்து அந்தக் காரில் வந்தவர்கள் விறு விறுவென மிதியடிகளை மாட்டிக்கொண்டு அவனைப் பார்த்தனர்.
அவன் நிலைமையைக் கண்டு அந்தக் கூட்டத்தில் இருந்த பெரியவர் 500 ரூபாயை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அதைக் கையில் வாங்கி பார்த்த அவன், ""சார்! 500 ரூபாய் கொடுக்கறீங்க... இவ்வளவு வேண்டாம்..!'' என்று சொன்னான்.
அந்தப் பெரியவர், புன்முறுவலுடன் அவனைப் பார்த்து, ""தம்பி! உன்னைப் பார்த்தா பசியாய் இருப்பது போல் உள்ளது. போய் நன்றாகச் சாப்பிடு!'' என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்று விட்டார்.
அவனுக்கு அந்தப் பசியிலும் ஆச்சரியமாக இருந்தது. கையில் எந்தக் காசும் இல்லாமல் இந்த ஊருக்கு வேலை தேடி வந்த நான், இப்பொழுது 500 ரூபாய் கையில் வைத்திருக்கிறேன். ஆண்டவர் யாரையும் கைவிடுவதில்லை. நாம் மட்டும் மனதை இழக்காமல் இருந்தால் போதும். மனதுக்குள் வைராக்கியம் வர எழுந்தவன், முதலில் சாப்பிட்டு விட்டு, கோயில் நிர்வாக அலுவலகத்துக்கு வந்து, கோயிலுக்கு வருபவர்களின் மிதியடிகளைப் பார்த்துக் கொள்ள அனுமதி கேட்டான்.
அவனுக்கு அனுமதி கிடைத்தது. சில மாதங்கள் ஓடின. இவனது நேர்மையான செயல்பாட்டால், இருசக்கர, நான்கு சக்கர வாகனப் பராமரிப்பு குத்தகையும் கிடைத்தது. தொடர்ந்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறினான். தனது தாயையும் அந்த நகரத்திற்கு அழைத்து வந்து செல்வந்தனானான்.
பரிசுத்த வேதாகமத்தில், "கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை' என சங்கீதம் 37:28 -இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, நாமும் எந்த வேலையாக இருந்தாலும் நேர்மையாகச் செய்யும்போது ஆண்டவர் நம்மைக் கைவிட மாட்டார்.