

உலகில் ஐம்புலன்களுக்கும், ஆறாவது அறிவிற்கும் எட்டாத ஆன்மிக ரகசியங்கள் இருக்கின்றன. அந்த ரகசியங்களை எடுத்துச் சொல்வதன் மூலம், மற்ற இலக்கியங்களிலிருந்து சாஸ்திரங்கள் மாறுபட்டுத் தனித்து நிற்கின்றன.
-தர்மோதயம்
சிவலிங்கம் ஏன் வட்டவடிவமாக இருக்கிறது? வட்டவடிவமான சொரூபத்துக்குத்தான் அடி முடி இல்லை; அதற்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை, மற்றவற்றுக்கு உண்டு. "ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம்' என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.
-சைவ சமயம்
பரிசுத்தமானவன் யார்? விவேகம் உள்ளவன். சிறந்த நன்மை அளிப்பது எது? தர்மம். வாழ்க்கை துணை யார்? நல்ல மனைவி. வழிப்பயணத்திற்கு துணை யார்? உயர்ந்த கல்வி.
-நீதி சாஸ்திரம்
ஓங்காரம் உருவ நிலையில் தெய்வங்களாகவும், அருவ நிலையில் உயர்ந்த பரம்பொருளாகவும் இருக்கிறது.
-மாண்டூக்ய உபநிஷதம்
உயர்ந்தவர்கள் சில நாள்கள் தங்களிடம் வந்தவர்களையும், பழைய நண்பர்களைப் போலக் கருதுவார்கள். கீழ் மக்கள் பல நாள் பழகியவர்களிடமும் அன்பு செலுத்தாமல் பழிப்பார்கள்.
-நாலடியார், கீழ்மை 9
நாம் உட்கொள்ளும் உணவு தூய்மையாக இருக்க வேண்டும். அந்த நிலையில் மனம் பற்றின்றி, பொறாமையின்றி, மனமயக்கமின்றி பொருள்களுடன் தொடர்புகொள்ள முடியும். அப்போது மனமும் தூய்மை அடைகிறது. இதன் காரணமாக இடைவிடாத இறைவன் நினைவு மனதில் எழுகிறது. அதே சமயத்தில் மனதிற்கு அளிக்கப்படும் (தெய்விகச் சிந்தனைகள் என்ற) உணவைப் பற்றியும் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
-சுவாமி விவேகானந்தர்
இறைவனை அடைய வேண்டும்' என்ற நோக்கத்துடன் தம்மை அணுகுகின்ற மாணவர்களுக்கு, வேதபாடம் ஆரம்பிக்கும்போது தூயவர்கள் "ஓம்' என்றே கூறுகிறார்கள். "ஓம்' என்று ஓதி பயிற்சியை ஆரம்பிக்கின்ற மாணவன் இறைவனை அடைகிறான்.
-தைத்திரீய உபநிஷதம் 1.8
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.