தேவகோட்டை கந்தன் விழா!

சைவமும், தமிழும் தழைத்தோங்கும்  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை திருநகரில் கந்த சஷ்டி விழா கடந்த 48 ஆண்டுகளாக நடைபெறுகிறது.
தேவகோட்டை கந்தன் விழா!
Updated on
2 min read

சைவமும், தமிழும் தழைத்தோங்கும்  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை திருநகரில் கந்த சஷ்டி விழா கடந்த 48 ஆண்டுகளாக நடைபெறுகிறது.

நகரச் சிவன் கோயில்,  ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புற அருள் பொழியும் திருத்தலமாகும். மதுரைக்கு இணையாக கிழக்கு நோக்கிய அம்மன் சந்நிதியும், இரண்டு ராஜ கோபுரங்களும் அழகு சேர்க்கின்றன. இங்கு சேக்கிழார் திருவுருவத்துக்கான கல்லானது, குன்றத்தூரில் இருந்து கொண்டு வந்து வடிவமைக்கப் பெற்று, தனிச் சந்நிதியாக உள்ளது.

இங்கு அருள்பாலிக்கும்  ஸ்ரீ பாலதண்டாயுதபாணி பழனிக்கு நிகராக அருள்பொழியும் அருட்கடலாக விளங்குகிறார்.  கையில் தண்டாயுதத்துடன் நின்ற திருக்கோலத்தில், இடது திருக்கரத்தை தொடையில் வைத்த வண்ணம், கொஞ்சும் அழகுக் குமாரராகக் காட்சி தருகிறார்.  ஆண்டியின் கோலமாக  காணப்பெற்றாலும் இவரது தலையின் உச்சியில் குடுமி இருப்பது சிறப்பாகும்.
கேட்டவருக்கு கேட்டவரம் அருளும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமியின் மீது திரு ஆமாத்துர் வண்ணச்சரபம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.

ஐப்பசி பிரதமையில் காப்புக் கட்டி கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரம் மிகச் சிறப்பாக, திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இங்குதான் நடைபெறுகிறது.  இதற்கு அடுத்தநாள் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணங்கள் தனித்தனியாக நடைபெறுகின்றன.

விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி அளவில்  விநாயகருக்கும், ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கும், வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக,  ஆராதனைகள் நிகழும். காலை, மாலை இரு வேளைகளிலும் லட்சார்ச்சனை நடைபெறும்.

மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஒவ்வொரு வாகனத்தில் மஞ்சம், யானை வாகனம், கைலாச வாகனம், தங்கக் குதிரை வாகனம், பெரிய வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம், பெரிய வெள்ளி மயில் வாகனம், புஷ்பப் பல்லக்கு என அற்புத அலங்காரங்களுடன் விநாயகருடன் வீதியுலா வருவார். சிறப்பு நாகசுவரம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் திருவீதி உலாவில் நிகழும்.

தாரகாசுரன் (2}ஆம் நாள்),  சிங்க முகாசுரன்( 4}ஆம் நாள்) வதங்களைத் தொடர்ந்து ஆறாம் நாள் சூரசம்ஹாரம் நிகழும். வள்ளி, தெய்வானை  சமேத ஸ்ரீ சுப்பிரமணிய  சுவாமி  பெரிய  வெள்ளி  ரகத்தில்  திருவீதியுலா வந்து கோயிலின் முன் உள்ள மிகப் பெரிய திடலில் காட்சி தருவார். அவருக்கு முன்பாக சூரபதுமன் ஆடிக்கொண்டிருப்பார்.

சுவாமி திருவீதியுலா நிறைவு பெற்று,  கந்தவேல் சதுக்கம் என்ற பெரிய திடலுக்கு வந்தவுடன் சிவாச்சாரியார் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சந்நிதியில் இருந்து சூரசம்ஹாரத்துக்கான வேலை எடுத்து வந்து அம்பாள் ஸ்ரீ மீனாட்சி திருக்கரத்தில் வைத்து தீபாராதனை நிகழ்த்துவார்.  இதையடுத்து, முருகப்பெருமான் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும்.

தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'  என்ற கோஷம் முழங்கிட சூரசம்ஹாரம் நிகழ்த்தப் பெறும். சூரன் சேவலும்,  மயிலும்  ஆனான் என்பதற்கு அடையாளமாக, சூரன் தலை வேலால் எடுக்கப்பட்டவுடன் சேவல் பறக்க விடும் காட்சி மெய்சிலிர்க்கும் ஒன்றாகும்.

சம்ஹாரவேல், சேவல்கொடி, மயில் வாகனத்துடன் வள்ளி, தெய்வானையுடன் அருளும்  முருகனுக்கு தீபாராதனை நடைபெறும்.  மறுநாள் சம்ஹாரவேலுக்கு கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.  வள்ளி திருமண நாளில் வள்ளியம்மையார் தினைப் புனக்காவல்,  யானை துரத்தும் நிகழ்ச்சி ஆகியவை ஆச்சரியமாக  இருக்கும்.

தமிழ்க் கடவுளான முருகனுக்கு, தீபாவளி தொடங்கி 9 நாள்கள் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் நிகழ்வுகள்  ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆண்டுதோறும் விழாவில் முதல் உரை நிகழ்த்தி வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது இளம்வயதில் பரதநாட்டியம் ஆடியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "முருகன் பெருமை'  எனும் தலைப்பில் மூன்று மணி நேர உரை நிகழ்த்தியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபல சங்கீத மேதைகளின் இசைக்கச்சேரி விடியற்காலை 5 மணி வரை நடைபெற்றதுண்டு.  தவத்திரு குன்றக்குடி அடிகளார் சூரசம்ஹார நாளன்று காலை முதல் மாலை வரை பட்டிமன்றம் நிகழ்த்தியுள்ளார்.  முன்பெல்லாம் அகில இந்திய வானொலி நிலையம் இந்த மேடை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒலிபரப்பு செய்ததுண்டு.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கலை நிகழ்ச்சிகள் நவ.12 முதல் 21}ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகின்றன.

இலக்கிய மேகம் ந. ஸ்ரீனிவாசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com