/

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ராணுவ தலைமை தளபதி ரத்நாயகே

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி கூறியுள்ளார்.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 6:31 pm

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி கூறியுள்ளார்.

இலங்கையின் 20ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயகே வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை இந்தப் பதவியில் இருந்து வந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா பாதுகாப்புத் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணுவத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ரத்நாயகே வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ""நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அரசியல் சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு புதிய கோணத்தில் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அதை எதிர்கொள்ளும் வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்றார்.

ரத்நாயகே, கடந்த 1980ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் பயிற்சி அதிகாரியாக சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு பதவிகளை வகித்த அவர், கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பிறகு ராணுவத்தின் 2ஆவது நிலை தளபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் மகிந்த ராஜபட்ச, பாதுகாப்புத் துறை தலைமைத் தளபதி என்ற முறையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்த வீரர்களை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டார் என ரத்நாயகே தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவ வீரர்களின் நடத்தை குறித்து ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்து வருகிறது.

இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில், இலங்கைக்கு எதிராக 2 முறை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.