/

காஷ்மீர் பிரச்னையில் இடைத்தரகராக செயல்பட விரும்பவில்லை: அமெரிக்கா

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்னையில் இடைத்தரகராக செயல்பட விரும்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 6:32 pm

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்னையில் இடைத்தரகராக செயல்பட விரும்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நிலையில், அவருடன் சென்றுள்ள உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்னை தொடர்பான எங்களது கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை. இரு நாடுகளுக்கிடையேயான காஷ்மீர் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் இடைத்தரகராக செயல்பட அமெரிக்கா விரும்பவில்லை. அதேநேரம், இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமுகமான உறவு நீடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.

கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்திருந்த ஜான் கெர்ரி, இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் "வேண்டப்பட்ட நாடு' அந்தஸ்தை வழங்கி வர்த்தக உறவை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக இப்போது பாகிஸ்தான் சென்றுள்ள கெர்ரி மீண்டும் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் நல்லுறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. இதற்கு இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.