/

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தேர்தலில் போட்டியிட தடை: வங்கதேச நீதிமன்றம்

வங்க தேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி சட்டவிரோதமானது என டாக்கா உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம், அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 6:31 pm

வங்க தேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி சட்டவிரோதமானது என டாக்கா உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம், அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி, வங்கதேச தாரிகத் கூட்டமைப்பின் செயலாளர் ரிஸாவுல் ஹக் சந்த்புரி மற்றும் 24 பேர் டாக்கா நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஜமாத்-இ-இஸ்லாமியை அரசியல் கட்சியாக பதிவு செய்திருப்பது சட்டவிரோதமானது என அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.

மதம் சார்ந்த அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய சட்டத்தில் இடம் இல்லை என்றும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி வங்கதேசத்தின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் நம்பிக்கை வைக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம். மொஸாம் ஹுசைன், எம். இனயெதுர் ரஹிம் மற்றும் குவாசி ரிஸா-உல் ஹக் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டது.

1971இல் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக செயல்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு காரணமாக நிதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இனிமேல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.