

மெல்போர்ன்: நியூஸிலாந்தில் மின்சாதனக் கடைக்குள் கோடாரியுடன் நுழைந்து கடை ஊழியரைத் தாக்கிய கொள்ளையரைத் தடுத்த இந்திய வம்சாவளிச் சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
நியூஸிலாந்தின் ஆக்லாண்ட் நகரில் சுஹைல் படேல் என்பவர் மின்சாதனக் கடை நடத்தி வருகிறார்.
அந்தக் கடைக்குள் கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கடந்த திங்கள்கிழமை நுழைந்தது.
கடை ஊழியரை கிழே தள்ளிய கொள்ளையர் ஒருவர், அந்த ஊழியரை கோடாரியால் தாக்க முயன்றார்.
அப்போது அந்தக் கடையிலிருந்து தப்பியோடிக் கொண்டிருந்த உரிமையாளர் சுஹைல் படேலின் 6 வயது மகளான சாரா படேல் அந்தக் காட்சியைப் பார்த்தார்.
உடனடியாக சிறிதும் யோசிக்காமல் கொள்ளையரை நோக்கி ஓடிய அந்தச் சிறுமி, ஊழியரைத் தாக்க வேண்டாம் என்பது போல கொள்ளையர் மீது கைவைத்துவிட்டு, பிறகு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்கள் மூலம் வேகமாகப் பரவியது.
ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்காக, 6 வயது சிறுமி ஆயுதத்துடன் இருந்த கொள்ளையரை துணிச்சலாகத் தடுத்த சம்பவம் நியூஸிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நாட்டின் மிகத் துணிச்சலான பெண் என்று சாரா படேலை பலரும் பாராட்டி வருகின்றனர் என்று நியூஸிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சாராவின் தந்தை சுஹைல் படேல் கூறுகையில், ""எனது மகள் பிறருக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். கொள்ளையரிடமிருந்து ஊழியரைக் காப்பாற்ற முயன்றதன் மூலம் அவள் எங்களைப் பெருமையடையச் செய்துள்ளாள்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.