இலங்கையின் தலைநகரான கொழும்பு முழுவதும் வருகிற 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிச்சை எடுக்க நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை இலங்கையின் வளர்ச்சி மேம்பாட்டுத்துறை அமைச்சர் சம்பிகா ரணவகா வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
சூழ்நிலை காரணமாக இங்கு பிச்சை எடுப்பவர்களிடம் அன்புடனும், கனிவுடனும் நடந்துகொள்வதில் உறுதியாக இருக்கிறோம். மாறாக இதையே தொழிலாக வைத்துள்ளவர்கள் வேறு வேலையை தேடிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்கள் கண்டறியப்பட்டால் தக்க தண்டனை வழங்கப்படும்.
முதல்கட்டமாக பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக கல்வி வசதி ஏற்படுத்தித் தரப்படும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இவர்களுக்கென பிரத்தியேகமாக மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கொழும்பில் மட்டும் 600-க்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுப்பதாக அமைச்சரின் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொதுமக்களுக்கான உதவும் தன்னார்வ தொண்டு அமைப்புடன் இணைந்து சமூக மேம்பாட்டு அமைச்சகம் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.