

ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தி வந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகக் காரணமான அந்த நாட்டின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா (61), அந்த நாட்டின் துணை அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
பிரிட்டனிடமிருந்து ஜிம்பாப்வே கடந்த 1980-ஆம் ஆண்டு விடுதலை பெற்றதிலிருந்து அந்த நாட்டில் ஆட்சி செலுத்தி வந்தவர் ராபர் முகாபே (93). வயது முதிர்ச்சியின் காரணமாக அவர் பதவி விலகுவதாகக் கூறப்பட்ட நிலையில், துணை அதிபர் இம்மர்ஸன் நாங்கக்வாவை முகாபே பதவியிலிருந்து அகற்றினார். தனது 52 வயது மனைவியை அடுத்த அதிபராக்குவதற்காகவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி கான்ஸ்டன்டினோவையும் கைது செய்ய முகாபே உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கான்ஸ்டன்டினோவின் உத்தரவின் பேரில் ராபர்ட் முகாபேயின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
அதன் தொடர்ச்சியாக, முகாபே தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, முகாபே பதவியிலிருந்து நீக்கிய முன்னாள் துணை அதிபர் இம்மர்ஸன் நாங்கக்வா புதிய அதிபராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், இந்த மாதம் ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து 19-ஆம் தேதி ஓய்வு பெற்ற கான்ஸ்டன்டினோவும், முகாபே அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கெம்போ மொஹாதியும் துணை அதிபர்களாக வியாழக்கிழமை பொறுப்பேற்றனர்.
இத்துடன் முகாபே ஆட்சிக்கு எதிரான ராணுவப் புரட்சி நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.