நைஜீரியா: பயங்கரவாதிகள் கடத்திய 82 மாணவிகள் விடுவிப்பு
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற பள்ளி மாணவிகளில் 82 பேர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.


நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற பள்ளி மாணவிகளில் 82 பேர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக அதிபர் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஸ்விஸ் அரசு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் கடந்த பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக 82 சிறுமிகள் பயங்கரவாதிகளால் விடுவிக்கப்பட்டனர். ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்த விமானத்தில் தலைநகருக்கு அழைத்து வரப்பட்டனர். அதிபர் முகமது புஹாரியை அவர்கள் சந்திக்கவுள்ளனர்.
போகோ ஹராம் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த சிலர் விடுவிக்கப்பட்டனர். மாணவிகள் விடுவிப்புக்கு உதவிடும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளின் பிடியில் இன்னுமுள்ள மாணவிகளையும் விடுவிக்க அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று நைஜீரிய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப். 14-ஆம் தேதி, சிபோக் என்னும் ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலிருந்து, 276 மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அவர்களில் 57 சிறுமிகள் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பினர். ஆனால் எஞ்சியவர்கள் கதி என்ன என்பது நீண்ட காலம் தெரியாமல் இருந்தது. பின்னர், அந்தச் சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி பயங்கரவாதிகளுக்கு மணமுடித்து வைக்கப்பட்டனர் என்றும் அவர்களில் சிலர் கர்ப்பமுற்று, வனப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் மறைவிடத்திலேயே குழந்தைகளை ஈன்றனர் என்றும் தெரிய வந்தது.
நைஜீரிய மாணவிகள் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்துதான், கொடூரமான போகோ ஹராம் பயங்கரவாதிகளைக் குறித்து உலக நாடுகள் அறிந்து கொண்டன.
இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள போகோ ஹராம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் உள்ள கிறிஸ்தவர்களைக் குறி வைத்துப் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.
கடத்தப்பட்ட இளம் பெண்களை விடுவிக்க சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அக்டோபரில் 21 மாணவிகள் விடுவிக்கப்பட்டு அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டனர்.
இடைவிடாமல் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தற்போது மேலும் 82 மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 116 சிறுமிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை. கடத்தப்பட்ட சிறுமிகளைத் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்த பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாகத் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுமிகளில் இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இதனிடையே, பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற வேறு பல சம்பவங்களும் நடைபெற்றன. அவர்களில் பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நைஜீரியாவை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள போகோ ஹராம் பயங்கரவாதக் குழு, கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து அரசை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இதில் 20,000 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...