

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது தேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் புதன்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. வரும் அக். 24-ஆம் தேதி வரை மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின்போது அதிபர் ஜீ ஜின்பிங் தலைமைக்கு ஒப்புதல் வழங்குவதுடன் அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தலைமைப் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின்போது, கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் செயல்பாடுகளும் சாதனைகளும் ஆய்வு செய்யப்படும். கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி வாய்ந்த மத்தியக் குழு இந்த தேசிய மாநாட்டின்போது தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறது.
இதைத் தவிர, ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவும் வழிகாட்டுதலுக்கும் புதிய மத்திய நெறிப்படுத்துதல் குழு அமைக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் வியாழக்கிழமை கலந்துகொண்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசியதாவது:
எனது தலைமையிலான சீன அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிப்பது வரவேற்கத்தக்கது. எனவே சீனா அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும். இதனால் நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும்.
அந்நிய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது அவசியமாகும். எனவே அவர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும்போது அவர்களுக்குள்ளான வர்த்தகம் பெருகும். எனவே வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் பயங்கரவாதம் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளோம் என்றார்.
சமீபத்தில் இந்தியாவுடனான டோக்லாம் எல்லைப் பிரச்னை, தெற்கு சீன கடல்பகுதிப் பிரச்னை மற்றும் ஜி20 உச்சி மாநாட்டின் போது வலியுறுத்தப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சீனாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.