மது அருந்திவிட்டுப் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் ஷியா லெபஃபுக்கு ரூ.1.77 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
"மேன் டவுன்', "'டிரான்ஸ்பார்மர்ஸ்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஷியா லெபஃப் (31). இவர் கடந்த ஜூலை மாதம் மது அருந்திவிட்டு ஒருவரிடம் சிகரெட் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அந்த நபர் சிகரெட்டை கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில், கடுங்கோபம் அடைந்த நடிகர், சிகரெட் தரமறுத்த நபரை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். கைது செய்ய வந்த அதிகாரியையும் தரக்குறைவாக பேசினார். இதையடுத்து, லெபஃபை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சவானா நகர நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன்பு ஆஜரான லெபஃப் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, லெபஃப், கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக ஓராண்டு மனநல மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த நடிகருக்கு ரூ.1.77 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மதுப் பழக்கத்துக்கு அவர் எவ்வளவு தூரம் அடிமையாகி உள்ளார் என்பதைக் கண்டறிய விரிவான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.