சவுதி அரேபியப் பெண்கள் கார் ஓட்ட, அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இது அமலுக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
சவுதி அரேபியாவில் பெண்கள் பல வகையான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர், பெண்ணுரிமைக் கோருவோர் சவுதி அரேபியாவில், 1990-ஆம் ஆண்டிலிருந்து பெண்களை கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும்; அதற்குரிய ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கு பழைமைவாத மத குருமார்கள் இது சமூகத்திற்கு கெடுதல் செய்து பாவத்திற்கு வழிவிடும் என்று தெரிவித்தார்கள்.
ஆனால், அந்நாட்டு அரசு கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்காமல், படிப்படியாகப் பெண்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கி வந்தது. சமீபத்தில், நாட்டின் முக்கிய மைதானத்தின் அரங்கில் அமர பெண்களுக்கு அனுமதி தரப்பட்டது. 2015-ஆம் ஆண்டிலிருந்து பெண்கள், அந்நாட்டுத் தேர்தலில் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், சவுதி மன்னர் சல்மான், 'சவுதி பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கி, நேற்று செவ்வாய்கிழமை (செப்.26) தேதி உத்தரவிட்டுள்ளார் என்று அந்நாட்டு அரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கார் ஓட்டுவதற்கான விதிமுறைகள் வகுத்து அறிக்கை அளிக்க கமிட்டி அமைக்கவும், 30 நாள்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மன்னர் கூறியுள்ளார்.
வரும் 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரவிருக்கிறது. நாட்டை நவீனமயமாக்கும் கொள்கையின் அடிப்படையில், பெண்களின் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.